காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி மாபெரும் பேரணி!

இலங்கையில் யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி, மட்டக்களப்பில் மாபெரும் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி இந்த பேரணியை முன்னெடுக்கவுள்ளதாக, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களது சங்கத்தின், மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளர் அமலநாயகி குறிப்பிட்டுள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி பல ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்த போதும், இலங்கை அரசாங்கத்திடமிருந்து காத்திரமான பதிலேதும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சகல தரப்பினரதும் பங்குபற்றுதலுடன் இப்பேரணி முன்னெடுக்கப்படவுள்ளதாக அமலநாயகி மேலும் குறிப்பிட்டார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகமும் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருவதால், அதிலும் நம்பிக்கை அற்றுப் போயுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டார். இந்நிலையில், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் மேலும் இழுத்தடிப்புச் செய்யாமல் உடன் தீர்வை பெற்றுத்தர இலங்கை அரசாங்கத்திற்கு சர்வதேசம் அழுத்தம் கொடுக்க வேண்டுமென வலியுறுத்தி இம்மாபெரும் பேரணி முன்னெடுக்கப்படவுள்ளது.

அத்தோடு, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகம் அமைக்கப்படுமாயின், பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்திலும் அந்த அலுவலகம் அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான விடயங்களை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இப்போராட்டத்திற்கு கல்விச் சமூகத்தினர், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள், மதகுருமார்கள் உள்ளிட்ட சகல தரப்பினரும் எவ்வித வேறுபாடுகளும் இன்றி ஆதரவு வழங்கி தமது கோரிக்கையை வலுப்படுத்த உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்