காங்கேசன்துறையில் தமிழரசுக் கட்சிக்கு எதிராக நாளை போராட்டம்!

இலங்கை தமிழரசுக்கட்சிக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை காங்கேசன்துறை கடற்றொழில் அமைப்புக்கள் முற்றுகைப்போராட்டமொன்றை நடத்தப்போவதாக அறிவித்துள்ளன.

மாவை சேனாதிராசாவின் தனிப்பட்ட செயலாளரும் வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தலைவருமான சோ.சுகிர்தன் மீது நடவடிக்கையெடுக்க வலியுறுத்தியே தமிழரசுக்கட்சிக்கு எதிரான போராட்டத்தை நடத்த கடற்றொழில் அமைப்புக்கள் முடிவு செய்துள்ளன.

மீளக்குடியேற்றப்பட்ட மக்களில் கடற்றொழிலாளர்களது பயன்பாட்டிற்கென அரசினால் வழங்கப்பட்ட ஆவளை மீன்பிடி இறங்குதுறையினை ஆக்கிரமித்து மாவை சேனாதிராசாவின் தனிப்பட் செயலாளரும் வலி.வடக்கு பிரதேச சபை முன்னாள் தலைவருமான சோ.சுகிர்தன் மயானமொன்றை அமைத்துள்ளதாக கடற்றொழில் அமைப்புக்கள் குற்றச்சாட்டுக்களினை முன்வைத்துள்ளன.அத்துடன் இன்று அம்மயானத்தில் சடலமொன்றை சுகிர்தன் முன்னின்று அடக்கம் செய்ததாக சொல்லப்படுகின்றது.கனரக வாகனங்கள் சகிதம் வந்திருந்த சுகிர்தன் குறித்த மயானத்தை நிறுவியதாக சொல்லப்படுகின்றது.

இதனால் 200 இற்கும் அதிகமான கடற்றொழில் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையினில் ஆக்கிரமிக்கப்பட்டு மயானம் அமைக்கப்பட்டுள்ள ஆவளைப்பகுதியில் நாளை முற்றுகைப்போராட்டமொன்றை நடத்தவுள்ளதாக கடற்றொழில் அமைப்புக்கள் அறிவித்துள்ளன.

காங்கேசன்துறை –மயிலிட்டி வீதியில் ஊறணி பகுதியில் குறித்த ஆவளை இறங்குதுறை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்