ஓரணியில் திரண்டு வடக்கு கிழக்கில் சரித்திரம் படைப்போம்! பங்காளிகளிடம் சிங்கக்கொடி சம்பந்தன் கோரிக்கை

“வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தக் கூட்டமைப்பைப் பிளவுபடுத்த சிலர் கங்கணங்கட்டிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்குத் துணைபோகாதீர்கள்.

ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ‘வீடு’ சின்னத்தில் எதிர்கொண்டு வடக்கு, கிழக்கில் சரித்திரம் படைப்போம். இந்த நம்பிக்கை எனக்கு உண்டு” என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோரிடம் இவ்வாறு தான் கோரியுள்ளார் என்று இரா.சம்பந்தன் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இவர்களுடனான பேச்சு தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கொழும்பு ஊடகம் ஒன்று வினவியபோது,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு ஜனநாயகக் கட்சி. இது ஒரு குடும்பம் போன்றது. குடும்பத்துக்குள் சிறுசிறு பிரச்சினைகள், தவறுகள் வருவது வழமை. இதை நாம் பெரிதுபடுத்தக்கூடாது.

வடக்கு, கிழக்குத் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் வேளையில் இந்தக் கூட்டமைப்பை பிளவுபடுத்த உள்ளுக்குள்ளும் வெளியிலும் சிலர் கங்கணங்கட்டிச் செயற்பட்டு வருகின்றார்கள்.

இதற்குத் துணைபோகாதீர்கள். ஒற்றுமையுடன் ஓரணியில் திரண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலை ‘வீடு’ சின்னத்தில் எதிர்கொண்டு வடக்கு, கிழக்கில் சரித்திரம் படைப்போம். இந்த நம்பிக்கை எனக்கு உண்டு.

எனவே, எக்காரணம் கொண்டும் கூட்டமைப்பிலிருந்து வெளியேறவேண்டாம் என்று பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ), த.சித்தார்த்தன் (புளொட்) ஆகியோரிடம் நான் விநயமாகக் கேட்டுள்ளேன்.

ஆசனப் பங்கீட்டு விவகாரத்தைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம், பேச்சு நடத்தலாம் என்று அவர்களிடம் தெரிவித்தேன். தொடர்ந்து பேச்சு நடத்துவதற்குத் தயார் என்று அவர்களும் கூறினர்.

இறுதி முடிவு நல்லதாக அமையும். கூட்டமைப்பின் மூன்று பங்காளிக் கட்சிகளும் (தமிழரசுக் கட்சி, ரெலோ, புளொட்) ஒற்றுமையுடன் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும்” என்று கூறியுள்ளார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்