ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் 14 தமிழ்த்தேசிய கட்சிகள் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு

கடந்த 50 ஆண்டுக்காலத் திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், தமிழ் நாட்டின் உரிமைகளான தமிழ் உரிமை, காவிரி நீர், முல்லைப்பேரியாற்று அணை, பாலாற்றுப் பாசன வேளாண்மை, கச்சத்தீவு மண்ணுரிமை உள்ளிட்ட பலவற்றையும் இழந்து தமிழர்கள் உழைப்பிற்காகவும் பிழைப்பிற்காகவும், குடிநீருக்காகவும் கூட அல்லல்படும் அவலநிலையை மாற்றிடவும்…

தமிழ்நாட்டின் மலைவளம், காட்டுவளம், கனிமவளம், ஆற்றுவளம், நிலத்தடி நீர் ஊற்றுவளம் என எல்லாவற்றையும் பறிகொடுத்த சுரண்டல் ஆட்சியாளர்களின் எங்கும் ஊழல்! எதிலும் இலஞ்சம்! என்ற முறையற்ற நிருவாகத்தைக் களைந்திடவும்…

தமிழ் நிலமெங்கும் அணுவுலைகள், நியூட்ரினோ ஆய்வுக்கூடம், மீத்தேன்-ஹைட்ரோகார்பன் எரிகாற்று, பெட்ரோலியம் போன்ற இயற்கை வள எடுப்பு என்ற பெயிரில் வேளாண் நிலங்கள் அழிப்பு போன்ற எண்ணற்றக் கொடுஞ்செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும்…

இன்றைய அறிவியல் வளர்ச்சி விண்ணை முட்டும் காலத்திலும் தமிழ் தேசிய பேரினத்தில் நிலவிவருகிற சாதி, சமய, ஏழை, பணக்கார ஏற்ற தாழ்வுகளைக் களைந்து நாம் தமிழராக ஓரணியில் திரண்டு இனக்குழுக்களிடையே இருக்கும் பகை முரண்பாடுகளை முற்றிலும் ஒழித்திடவும்…

இந்திய தேசிய – திராவிட தேசிய கட்சிகளுக்கு மாற்றாக மக்கள் நலம் சார்ந்த, தமிழ் நிலவளம் சார்ந்த தூயத் தொண்டு என்ற அடிப்படையிலான, தமிழ் தேசிய அரசியலை முன்னெடுத்து களமாடி வரும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் இராதாகிருட்டிணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில்போட்டியிடும் திருக் கா.கலைக்கோட்டுதயம் அவர்களுக்குத் தங்கள் தலைமையிலான இயக்கத்தின் ஆதரவைத் தந்து, புதியதோர் அரசியல் மாற்றத்திற்குத் தோள் கொடுத்துத் துணை நிற்க வருமாறு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சார்பில் அன்புரிமையுடன் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 14 தமிழ்த்தேசிய கட்சிகள், இயக்கங்கள் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவை வழங்கியிருக்கிறார்கள்.

தமிழ் தேசிய கட்சி, தலைவர்: ஆ.கி.சோசப் கென்னடி,
தமிழர் நலம் பேரியக்கம், தலைவர்: இயக்குநர் மு.களஞ்சியம்,
ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தலைவர்: அ.வினோத்,
தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பேரவை, தலைவர்: சு.நடராசன்,
பச்சைத் தமிழகம் கட்சி, மை.பா.சேசுராசு,
தமிழ் மக்கள் சமூக நீதிக் கழகம், தலைவர்: எழில்அரசு,
தமிழர் தேசிய கட்சி, தலைவர்: பெ.இளங்கோ மள்ளர்,
சமூகநீதி மக்கள் கட்சி, தலைவர்: ச.கு.உமர் முக்தார்,
மருது மக்கள் இயக்கம், தலைவர்: செ.முத்துப்பாண்டி,
மருது மக்கள் கட்சி, பொதுச் செயலாளர்: மா.து.இராசுக்குமார்,
சிறுபான்மை மக்கள் சக்தி, பொறுப்பாளர்: இராபர்ட் சாம்சன்
இளந்தமிழர் முன்னணிக் கழகம், பொதுச்செயலாளர்: செ.செல்வக்குமார்

உள்ளிட்ட பல தலைவர்கள் இன்று (12-12-2017 செவ்வாய்க்கிழமை) காலை 11 மணி அளவில் சேப்பாக்கத்திலுள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெறவிருக்கிற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் தங்கள் ஆதரவை வழங்குகிறார்கள்.

நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியினர் இச்சந்திப்பை ஒருங்கிணைக்கிறார்கள்.

இந்நிகழ்விற்கு உங்கள் ஊடகத்தின் பத்திரிக்கையாளர்களை அனுப்பிச் செய்தி சேகரித்து வெளியிடுமாறு உங்களைத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்