தமிழக மீனவர்கள் துயரத்தில் பங்குகொள்ளும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

ஓகிப் புயலால் கரை திரும்பாத மீனவரை, 14 நாட்களாகியும் இன்னும் தேடிக் கொண்டிருப்பதாகவே இந்திய அரசு அறிவித்தள்ள நிலையில், இன்னும் 600 மீனவர்கள் வீடு திரம்பவில்லை என்ற தகவல் தாய்த் தமிழகத்தில் இருந்து அறியக்கூடியதாக உள்ளது. தொப்புள் கொடி உறவுகளாகிய தமிழக உறவுகளின் துயரத்தில் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவையின் சார்பாக நாமும் பங்குகொள்கின்றோம்.

புயல் தாக்கும் முன்பு கடலுக்குச் சென்ற மீனவர்கள் பலரும் சூறாவளி காற்றில் சிக்கிக் காணாமல் போய்விட்டனர் என்ற தகவலானது மிகவும் துயரமான செய்தியாகும். தமிழக அரசின் கணக்குப்படி குமரி மாவட்டத்தில் 1229 விசைப்படகுகள் உள்ளன என்றும் இதில் காணாமல் போன 39 படகுகளில் 6 படகுகள் திரும்பி வந்து விட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது. இதுதவிர 945 படகுகள் பாதுகாப்பாக உள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 182 படகுகளில் சென்ற 2124 மீனவர்கள் மீட்கப்பட்டு கேரளா, கர்நாடகா, குஜராத், கோவா, மராட்டியம் மற்றும் தீவுப் பகுதிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றும் அறிக்கைகள் மூலமாகவும் தமிழகத்தில் இருந்து கிடைத்த தகவல்கள் மூலமாகவும் அறியக்கூடியதாக உள்ளது. இப்பேரழிவானது தமிழக மக்களை மட்டுமல்ல ஈழத்தமிழர்களையும் துயரில் ஆழ்த்தியுள்ளது.

தமிழகத்தில் வாழும் கிராம மக்களையும் அங்குள்ள தொண்டு நிறுவனங்களையும் அணுகியபோது அவர்களின் கூற்றுப் படி 1900 மீனவர்கள் இன்னும் கரை ஒதுங்கவில்லை என்று கூறப்படுகின்றது. சொந்தங்களைத் தொலைத்த தமிழக உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்ளுவதோடு மத்திய மற்றும் தமிழக அரசுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேண்டிய உதவிகளை வழங்க விரைந்து செயற்படவேண்டும் என தாழ்மையோடும் உரிமையோடும் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சார்பாகக் கேட்டுக்கொள்ளுகின்றோம்.

-அனைதஆதுலக ஈழத்தமிழர் மக்களவை-

About இலக்கியன்

மறுமொழி இடவும்