கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதி யில் விடுதலைப்புலிகளின் முகாம் இருந்த இடத்தில் சில இறுவட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளன என இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர். அவை நேற்றுமுன்தினம் மீட்கப்பட்டன.
அவற்றில், தலைவர் பிரபாகரனின் வாழ்க்கை வரலாறு மற்றும் அவரது வீரத்தைப் பிரதிபலிக்கக் கூடிய காணொளிகள் காணப்படுகின்றன என இராமநாதபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி – இராமநாதபுரம் பகுதி, மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நிலையில், அங்கு வீடு கட்டுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்போதே, பாதுகாப்பான கொள்கலன் ஒன்றிலிருந்து இறுவட்டுக்கள் மீட்கப்பட்டன.
91 இறுவட்டுக்களும், 61 பாதுகாப்பு உறைகளும் இதன் போது மீட்கப்பட்டன. அத்துடன் குறித்த இறுவட்டுக்களில் ‘வயதானவர்களுக்கு மட்டும்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இதேவேளை, 2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளால் வெளியிட்டு வைக்கப்பட்ட சுனாமி தொடர்பான இறுவட்டு ஒன்று முல்லைத்தீவில் நேற்றுமுன்தினம் காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.