சம்பந்தன் -மஹிந்த சந்திப்பு: முன்னணிக்கு சந்தர்ப்பமில்லை? (காணொளி)

மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடுவதாக கூட்டமைப்பினர் எம்மீது பிரச்சாரங்களை செய்துவந்தனர்.ஆனால் இதுவரை எம்மை சந்திக்க ஆர்வமற்றிருக்கின்ற மஹிந்த ஓடோடிப்போய் சம்பந்தரை நலம் விசாரித்தது ஏன் என தெரியவில்லையென்கிறார் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார்.

உள்ளூராட்சிசபைத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் சின்னத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் இணைந்து போட்டியிடும் தமிழ்த் தேசிய பேரவையின் வேட்பாளர்கள் தொடர்பான ஊடகவியலாளர்களிற்கான அறிமுகக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சம்பந்தரை மஹிந்த தன் மகன் சகிதம் சென்று நலன்விசாரித்திருக்கின்றார்.ஆனால் உங்களை தானே மஹிந்தவினை மீண்டும் ஆட்சிக்கொண்டுவர பாடுபடுவதாக கூட்டமைப்பினர் பிரச்சாரம் செய்கின்றனரேயென ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த பொன்னம்பலம் கஜேந்திரகுமார் அது தான் தனக்கும் புரியவில்லையென்றார்.
இந்த அரசின் பங்காளியாக கூட்டமைப்பு இருக்கின்றது.பங்காளிகளான மைத்திரியோ,ரணிலோ இரா.சம்பந்தரை வைத்தியசாலையில் எட்டிக்கூட பார்த்திருக்கவில்லை.ஆனால் மஹிந்த தனது மகனுடன் செல்கிறார்.அதேவேளை சம்பந்தனும் தன்பங்கிற்கு மீண்டும் மஹிந்தவுடன் இணைந்து செயற்பட தயார் என அழைப்புவிடுக்கின்றார்.

அவ்வாறாயின் மஹிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர பாடுபடுவது யாரென்பது சொல்லாமல் இப்பொழுது தமிழ் மக்களிற்கு புரிந்திருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஆனால் எந்த மஹிந்தவை கொண்டுவர தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாடுபடுவதாக சொன்னார்களோ அதனை சந்திக்க மஹிந்த இதுவரை ஏன் விரும்பவில்லையென்பது தெரியவில்லையெனவும் அவர் சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்