முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவில் இராணுவத்தின் வசமுள்ள எஞ்சிய காணிகளை விடுவிக்க வேண்டும் என்று கோரி மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலரிடம் கையளிக்கக் கொண்டு சென்ற மனு இராணுவத்தால் தடுக்கப்பட்டது.
அதற்குப் பதிலாக அபகரிக்கப்பட்ட காணிகளுக்கு மாற்றுக் காணிகளை அல்லது அவற்றுக்கான நட்டஈடு கோரும் மனுவே மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று கேப்பாபிலவு மக்கள் குற்றஞ்சாட்டினர்.
நட்டஈடு கோரிக் கையளிக்கப்பட்ட மனுவுக்கும் தமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் அவர்கள் கூறினார்கள்.
இராணுவம் கையகப்படுத்தியிருந்த 133.34 ஏக்கர் காணி நேற்று இராணுவத்தால் விடுவிக்கப்ட்டது. அவற்றில் 111.5 ஏக்கார் காணிகள் கேப்பாபிலவு மக்களுக்குச் சொந்தமானவை. இன்னும் 285.5 ஏக்கர் காணிகள் இராணுவத்தின் வசமே உள்ளன.
அவற்றை விடுவிக்க வலியுறுத்தி நேற்று மக்கள் மனு ஒன்றைக் கையளிக்க முயற்சித்தனர். காணி கையளிப்பு நிகழ்வு நடைபெற்ற இடத்துக்கு மனுவுடன் அவர்கள் சென்றனர். அவர்களின் முயற்சி இராணுவத்தால் தடுக்கப்பட்டு மனுக் கொண்டு சென்றவர் அந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்று மக்கள் கூறினர்.
மக்களின் மனுவுக்குப் பதிலாக இராணுவம் தயாரித்த மனு ஒன்று மீள்குடியேற்ற அமைச்சின் மேலதிக செயலரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டது. அதில் கேப்பாபிலவில் விடுவிக்கப்படாதுள்ள காணிகளுக்கு மாற்றுக் காணிகள் தாருங்கள். அல்லது நட்டஈடு தாருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த மனுவில் சுமார் 15 பேரின் கையெழுத்துக்கள் உள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
“இந்தச் சம்பவம் உண்மை. அது மறைக்கப்படக் கூடாது. இராணுவம் கையளித்துள்ள மனுவில் காணப்படும் கையொப்பங்களுக்கு உரிந்துடையவர்களிடம் விசாரித்தேன். காணிகளுக்கு நட்டஈடு தருமாறு ஒருபோதும் கோரவில்லை என்று அவர்கள் கூறினார்கள். இது தொடர்பில் அவர்களிடம் கடிதமும் பெற்றுள்ளேன். இது திட்டமிட்டே செய்யப்பட்டுள்ளது.”- என்று கூறினார் கேப்பாபிலவு காணி மீட்புப் போராட்டத்தை முன்னகர்த்திச் செல்லும் ஆறுமுகம் வேலாயுதபிள்ளை.