துயிலுமில்லங்களை வணக்கஸ்தலங்களாக மாற்றுவோம்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி

தமிழர் உரிமை போராட்டத்தில் உயிர்நீத்த மாவீரர்களின் துயிலுமில்லங்களை மீட்டு, அவற்றை வணக்கஸ்தலங்களாக மாற்றுவோம் என தமிழ் முற்போக்கு முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கிளிநொச்சி அலுவலகத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பில், முன்னணியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தங்கவேல் ஜெகதீஸ்வரன் இவ்வாறு குறிப்பிட்டார்.

கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லமானது, அண்மையில் தாவரவியல் பூங்காவாக மாற்றப்பட்டு அங்கு பெயர்ப்பலகை நாட்டப்பட்டது. இதுகுறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

துயிலுமில்லத்தை பூங்காவாக மாற்றும் கபட நோக்கம் ஆபத்தானதென குறிப்பிட்ட அவர், துயிலுமில்லத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதால் நாட்டின் இறைமைக்கு எவ்வித சோதனையும் வரப் போவதில்லையெனக் குறிப்பிட்டார்.

இந்நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிபெற்று பிரதேச சபையை பொறுப்பெடுத்து, கனகபுரம் துயிலும் இல்லத்தை மீளவும் மக்களிடம் ஒப்படைப்போம் என தங்கவேல் ஜெகதீஸ்வரன் குறிப்பிட்டார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்