சட்டசபைக் கூட்டம் நாளை-தினகரனின் திட்டம் நிறைவேறுமா?

ஆளுநர் உரையுடன் இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இதனையொட்டி தலைமை செயலகத்தில் அதற்கான இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஆண்டுதோறும் சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கும்போது ஆளுநர் உரையாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குவதால், அன்றைய தினம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உரையாற்ற இருக்கிறார்.

ஆளுநர் உரையில், அரசின் சாதனைகள், புதிய திட்டங்களை குறித்தும், செயல்படுத்தப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும் தகவல் இடம்பெறும். ஆளுநர் சுமார் ஒரு மணி நேரம் இந்த தகவல்கள் குறித்து பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் பேசி முடித்ததும் அவரது உரையை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார். அவர் வாசித்து முடித்ததும் நாளைய சட்டசபை நிகழ்ச்சிகள் நிறைவு பெறும். அனேகமாக, பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் வரை (13-ந் தேதி) சட்டசபை கூட்டம் நடைபெறும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்க இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பங்கேற்று பேச இருக்கிறார்கள்.

பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள சூழ்நிலையில், நாளை சட்டசபை கூட்டம் தொடங்க இருப்பதால், இந்தக் கூட்டத் தொடரில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. ஏற்கனவே, தமிழகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு வரும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சட்டசபைக்கு அவர் வர இருப்பதால் இங்கேயும் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பை காட்டும் என தெரிகிறது.

ஒரு புறம் ஆளுநருக்கு கண்டனம், டிடிவி தினகரன் பங்கேற்பு, ஸ்லீப்பர் செல்களின் களையெடுப்பு என நாளை தொடங்கவுள்ள கூட்டத்தொடர் பல முக்கிய நிகழ்வுகளின் காரணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்