ஜெனிவா அமர்வின் பின்னர் போராட்ட வடிவங்கள் மாறலாம் – காணாமல் போனோரின் உறவுகள்

தமது போராட்ட வடிவங்கள் ஜெனிவா அமர்வின் பின்னர் மாற்றப்படலாம் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரியிடம், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

தமது உறவுகள் தொடர்பான தகவல்கள் கிடைக்கும் வரை, இந்த போராட்டத்தை கைவிடப் போவதில்லை எனவும், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இலங்கையை சேர்ந்த கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரான ஹரி ஆனந்தசங்கரி, முல்லைத்தீவிற்கு நேற்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்தார். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், மற்றும் கேப்பாபுலவு மக்களின் பிரச்சினைகள் குறித்து, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் கேட்டறிந்து கொண்டார்.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை, ஹரி ஆனந்தசங்கரி முதலில் சந்தித்து கலந்துரையாடினார். நடைபெறவுள்ள ஜெனிவா அமர்வை எதிர்பார்த்திருப்பதாக குறிப்பிட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அதன் பின்னரே போராட்ட வடிவங்களை மாற்றுவது குறித்து தீர்மானிக்கப் போவதாக கூறியுள்ளனர்.

தற்போது உயிருடன் உள்ள பிள்ளைகளை கவனமான பார்த்துக்கொள்ளுமாறு கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை நிராகரித்த மக்கள், காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை மீட்கும் வரை போராடுவோம் எனவும் கூறியுள்ளனர்.

இதேவேளை கேப்பாபுலவில் இலங்கை இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களையும், ஹரி ஆனந்தசங்கரி சந்தித்து கலந்துரையாடினார்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமக்கு, இதுவரை முழுமையான தீர்வொன்று வழங்கப்படாமை குறித்து, கனேடிய நாடாளுமன்ற உறுப்பினரிடம் கேப்பாபுலவு மக்கள் எடுத்துரைத்துள்ளனர். தமது வாழ்வாதாரம் கேப்பாபுலவிலுள்ள காணிகளிலேயே உள்ளதாக சுட்டிக்காட்டிய மக்கள், சொந்த மண்ணில் குடியேற வேண்டும் என்பதே அனைவரதும் ஆவலாக உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்