சம்பந்தனின் பொங்கல் வாழ்த்து நகைப்புக்கிடமானது! – கஜேந்திரகுமார்

தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில், இறையாண்மை மதிக்கப்பட்டு சுயாட்சியுடன் கூடிய தீர்வினை பெறுவோம் என பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பது நகைப்புக்குரியது. இந்த ஏமாற்று வேலையை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

2017ம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 21ம் திகதிக்கு முன்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பு சமஷ்டி, சுயநிர்ணய உரிமை, வடகிழக்கு இணைப்பு, இறையாண்மை போன்றவற்றினடிப்படையில் தீர்வு கிடைக்க வேண்டும் என கூறியிருந்தது. மேலும் இவற்றுக்கு எதிராக ஒரு தீர்வு வருமாக இருந்தால் அதனை எதிர்ப்போம் என கூறியிருந்தார்கள். ஆனால் இன்று இலங்கை அரசாங்கத்துடன் பங்காளிகளாக மாறி புதிய அரசியலமைப்பு ஒன்றுக்கான இடைக்கால அறிக்கை ஒன்றை தயாரித்து, அதில் ஒற்றையாட்சியை அங்கீகரித்து வடகிழக்கு இணைப்பை மறந்து, பௌத்தத்திற்கு முதலிடம் கொடுத்திருக்கிறது.

அதற்கு மேலாக தாம் இணங்கிய ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு மக்கள் ஆணை வழங்கவேண்டும் என மக்கள் மத்தியில் இன்றைக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரச்சாரமும் செய்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கூட்டமைப்பின் தலைவர் உள்ளக சுயநிர்ணய உரிமை எனவும், சுயாட்சி எனவும், இறைமை மதிக்கப்பட்டு எனவும் கூறுவதை நகைப்புக்குரிய ஒரு கருத்து என கூறுவதில் தவறு எதுவும் இருக்காது. மேலும் உள்ளக சுயநிர்ணய உரிமை என்பதே ஒரு மோசமான விடயம்.

இருந்தும் ஒரு பேச்சுக்கு உள்ளக சுயநிர்ணயம் என சொன்னால் இடைக்கால அறிக்கையில் இறைமை பகிரப்பட முடியாதது என கூறப்பட்டுள்ளது. சமஷ்டி இல்லை என்கிறது இடைக்கால அறிக்கை. இந்த லட்சணத்தில் உள்ளக சுயநிர்ணய உரிமை, இது மதிக்கப்படல், சுயாட்சி என்பனற்றை இரா.சம்மந்தன் எங்கே எடுக்கப்போகிறார்? ஆக மொத்தத்தில் சம்மந்தனின் இந்த உரை நகைப்புக்குரியது. நொந்துபோய் கிடக்கும் தமிழ் மக்களின் தொண்டைக் குழியை நெரிக்கும் வகையிலான ஒரு கருத்தாகும் என்றார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்