மைத்திரி வீட்டிற்கு செல்வது நல்லது:சுரேஸ்!

ஜனாதிபதி தான் பதவியில் இருக்க பொருத்தமானவரா என சிந்திக்க வேண்டும்” என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பீ.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக கடந்த திங்கட்கிழமை (05) யாழுக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி, “காணாமலாக்கப்பட்டோரை எங்கும் தேடிவிட்டோம். கிடைக்கவில்லை. அவர்களின் பெற்றோருக்கு நட்டஈடு வழங்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

இக்கருத்து தொடர்பாக இன்று (07) கருத்து தெரிவித்த சுரேஸ் பிரேமச்சந்திரன்,

“காணாமல் போனவர்களின் உறவினர்கள் மிகத் தெளிவானதொரு அறிக்கையை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளனர். ஆகவே விசாரணை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமை. ஆனால் அரசாங்கம் எந்த விசாரணையையும் செய்யவில்லை.

அவ்வாறு எந்த விசாரணையும் மேற்கொள்ளாது, தேடிப் பார்த்தோம், காணவில்லை என்று ஜனாதிபதி கூறுகிறார். இது ஒரு ஜனாதிபதி கூறும் முடிவா. ஜனாதிபதி சட்டம் ஒழுங்குக்கு பொறுப்பாக இருக்கின்றார். நாட்டு மக்களின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த வேண்டும். நாங்கள் 23 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக கூறுகின்ற போது, அவர் தேடிப் பார்த்தோம் காணவில்லை என்றால், அவர்கள் எங்கே, அவர்களுக்கு என்ன நடந்தது.

ஆகவே அசண்டையீனமாக பதில் கூறும் ஜனாதிபதி, தான் பதவியில் இருக்க பொருத்தமானவரா என சிந்தித்து பார்க்க வேண்டும்” என தெரிவித்தார்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்