17-ந் தேதி சசிகலாவை சந்திக்கவுள்ளேன் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. பேட்டி

மவுன விரதத்தை முடித்த சசிகலாவை 17-ந் தேதி சந்தித்து பேசுகிறேன் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. கூறினார்.

டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. தஞ்சையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் இல்லாத ஆட்சி செய்கிறோம் என்று சொல்கிறார்கள். ஆனால் எல்லா இடங்களிலும் ஊழல் நடக்கிறது. இதனால் மத்திய அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். மாநிலத்தில் அரசு இருப்பதாகவே மக்கள் நினைக்கவில்லை.

சிறையில் மவுன விரதத்தை முடித்துக்கொண்ட சசிகலாவை வருகிற 17-ந் தேதி சந்தித்து பேச இருக்கிறேன். தஞ்சை மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை தொடங்க போவதாக அவரை சந்தித்து ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். இப்போது முடிந்து விட்டது. மீண்டும் அவரை சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும், சுப்ரீம் கோர்ட்டு விசாரணை பற்றியும் பேச இருக்கிறேன்.

கைக்கூலி

ஓ.என்.ஜி.சி. செயல்படுத்தும் திட்டத்தை ஜெயலலிதா கடுமையாக எதிர்த்து வந்தார். அவரது பெயரை சொல்லி ஆட்சி செய்பவர்கள், ஓ.என்.ஜி.சி. பணிக்கு தடை விதித்து இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் மத்திய அரசு செயல்படுத்தும் எந்த திட்டத்தையும் கண்டுகொள்வதில்லை.

நாங்கள் மத்திய அரசின் கைக்கூலி இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் சொல்கிறார். அப்படியென்றால் ஓ.என்.ஜி.சி. பணியை தடுத்து நிறுத்த வேண்டியது தானே?. ஓ.என்.ஜி.சி. பணியை நிறுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தது கண்டிக்கத்தக்கது. சட்டசபையில் ஜெயலலிதாவின் படத்தை ஏதோ மறைந்த முன்னாள் கவுன்சிலர், முன்னாள் மேயர் படத்தை திறப்பது போல் திறந்து விட்டு வீர செயல் செய்ததைபோல் பேசுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்