விடுதலைப் போராட்டத்தில் இருந்த போது நாங்கள் ராஜாக்கள் – முன்னாள் போராளி!

“விடுதலைப் போராட்டத்தில் இருந்த போது நாங்கள் ராஜாக்கள் போன்று சமூகத்தால் வரவேற்கப்பட்டோம்”இப்போது அனாதைகளாகப் பார்க்கப்படுகின்றோம். ஆனால் அதே சமூகத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை அறியும் போது நம்பிக்கையோடு வாழ்ந்து வந்திருக்கின்றோம் என இரு கண்களும் பார்வை இழந்த முன்னாள் போராளி தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவுப் பிரதேசத்திலுள்ள தாண்டியடி எனும் கிராமத்தில் வசித்து வரும் த.விஜயகுமார் முன்னாள் போராளி ஆவார். இலங்கையில் இடம் பெற்று வந்திருந்த யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் சாதாரண குடிமகனாக வாழ்ந்து கொண்டிருந்தவேளை இவரது கண்பார்வை மங்கத் தொடங்கியிருந்தது. இதனால் அரச வைத்தியசாலை ஒன்றில் இவரது கண்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது. சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவரது இருகண்களும் பார்வையை முற்றாக இழந்துள்ளார். இப்போது இவர் கண்பார்வை அற்ற ஒருவர், அதேநேரம் பிறப்பால் கண்பார்வையில்லாத ஒருபெண்ணைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். வருகின்ற மாதங்களில் இவரது மனைவிக்கு முதலாவது குழந்தைகிடைக்க இருக்கின்றது.

இந்நிலையில் சொந்தத்தில் வீடுகூட இல்லாத நிலையில் உறவினர்களின் வீடுகளில் மாறிமாறிக் காலத்தைக் கழித்துவரும் இவரது குடும்பத்திற்கென பிரதேசசெயலகம் தாண்டியடி எனும் கிராமத்தில் ஒரு துண்டுக் காணியை வழங்கியுள்ளது. வாழ்வகம் என்கின்ற விஷேட தேவையுடையோருக்காக பணியாற்றி வருகின்ற அமைப்பு இவரது குடும்பத்திற்காக ஒரு தற்காலிக கொட்டிலை அமைத்துக் கொடுத்திருக்கின்றது. எதிர்காலத்தில் அக்கொட்டிலின் ஒருபகுதியில் சிறுகடை வியாபாரம் செய்யக்கூடிய அமைப்பில் அக்கொட்டில் அமைக்கப்பட்டிருக்கின்றது. முற்றாக கண்பார்வையற்ற கணவனும் மனைவியும் எப்படி வியாபாரம் செய்யப் போகிறார்கள் என்பது கேள்விக்குரியதே?

விடுதலைப் போராட்டத்தில் இருந்த போது நாங்கள் ராஜாக்கள்; முன்னாள் போராளி!

விஜயகுமார் தனக்கு கிடைத்துள்ள காணியினுள் மலசலகூடம் ஒன்றினை அமைத்துத்தருமாறு மட்டக்களப்பிலிருந்து இயங்கிவரும் அஹிம்சா எனும் சமூக நிறுவனத்தைக் கேட்டிருந்தார். அதற்கான நிதிவசதியில்லாத நிலையிலும்கூட அஹிம்சா சமூக நிறுவனம் அவரது குடும்பத்துக்கான அத்தியாவசிய தேவையை மதிப்பீடுசெய்த வேளையில் அவரும், அவருக்காக உதவிக்கொண்டிருக்கின்ற வாழ்வக நிர்வாகிகளும், குடிநீர் அவரது குடும்பத்துக்கான முதன்மைத் தேவை என்பதை அடையாளப்படுத்தியதைத் தொடர்ந்து அஹிம்சா சமூக நிறுவனம் நீர் வழங்கல் சபையிடமிருந்து நீர் இணைப்பினைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நிதியுதவியை ஞாயிற்றுக் கிழமை (18) விஜயகுமாருக்கு வழங்கிவைத்துள்ளது.

எல்லா உடல் அம்சங்களும் பூரணமாக இருப்பவர்கள்கூட வாழ முடியாது தவிக்கின்ற இந்த உலகத்திலே, இரு கண் பார்வையையும் இழந்துபோன, எங்கள் வாழ்வு எப்படியிருக்கும் என்பதை சற்று சிந்தித்துப்பார்க்கும் காருண்யவான்களை நாங்கள் வாழ்த்தாமல் இருக்கமுடியாது. நிதியுதவியைப் பெற்றுக் கொண்டபோது கண்கலங்கிய நிலையில் விஜயகுமார் இவ்வாறு மனமுருகத் தெரிவித்தார்.

சாதாரணமாக கணவனுக்கு பார்வையில்லை என்றால் மனைவி வழி நடத்துவாள். மனைவிக்கு பார்வையில்லை என்றால் கணவன் வழிநடத்துவான். இருவருமே பார்வையற்றவர்களானால் அவர்களை யார் வழிநடத்துவர்? மனித கடமையை உணர்ந்த மனிதர்கள்தான் இத்தகையோர்க்கு உதவுதல் வேண்டும் என அஹிம்சா சமூக நிறுவனத்தின் ஆலோசகரின் த.வசத்தராசா இதன்போது தெரிவித்தார்.

About சாதுரியன்

மறுமொழி இடவும்