கூட்டு அரசைத் தொடர சிறிலங்கா அதிபர் அனுமதி – “விரும்பாதவர்களை வெளியேறலாம்”

மறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நண்பகல் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்றக் குழுவைச் சந்தித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா அதிபர், மைத்திரிபால சிறிசேன, தற்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் குறைபாடுகள் இருந்தாலும், மகிந்த ராஜபக்சவின் துணையுடன் ஆட்சியமைக்கப்படுவதை தாம் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போதைய கூட்டு அரசாங்கம் இன்னும் சில மாதங்களுக்குத் தொடரும், இதில் இதனை விரும்புபவர்கள் இணைந்திருக்க முடியும். விரும்பாதவர்கள் சுதந்திரமாக வெளியேறலாம். என்றும் சிறிலங்கா அதிபர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி பொதுச்செயலர் துமிந்த திசநாயக்க, தற்போதைய சூழலில் அரசாங்கத்தை மாற்றுவது, மகிந்த ராஜபக்சவின் பொதுஜன முன்னணிக்கு கிடைத்த வெற்றியாக அமைந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியினர் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும், இதனால் கூட்டு அரசாங்கம் தொடரும் அறிகுறிகள் தென்படுவதாகவும் பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்