தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழுவில், வடக்கு மாகாண முன்னாள் விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசனை இணைப்பதற்கு மூத்த சட்டத்தரணி வி.புவிதரன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் நேற்று இடம்பெற்றது.
இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சரால், பொ.ஐங்கரநேசன், திருமதி அனந்தி சசிதரன், க.அருந்தவபாலன் ஆகியோரை பேரவையின் மத்திய குழுவில் இணைப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டது.
அனந்தி சசிதரன், க.அருந்தவபாலன் ஆகியோர் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றிருக்காத நிலையில் பொ.ஐங்கரநேசன் மாத்திரம் கலந்து கொண்டிருந்தார். அவரை பேரவையின் மத்திய குழுவில் இணைப்பதற்கே மூத்த சட்டத்தரணி வி.புவிதரன் எதிர்ப்புத் தெரிவித்தார். பேரவையின் மத்திய குழுவில் ஒருவரை இணைத்துக் கொள்வதற்கு முன்னதாக பேரவையின் கூட்டம் நடத்தப்படும். அதில் ஆராயப்பட்ட பின்னரே மத்திய குழுவில் ஒருவரை இணைத்துக் கொள்ள முடியும்.
ஆனால் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், நேரடியாக மத்திய குழுக் கூட்டத்திற்கு அழைத்து வந்தமை தொடர்பிலும், அவரது தெரிவு தொடர்பிலும் சட்டத்தரணி புவிதரன் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார். இனிமேல் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டாம் என்றும் அவர் கூட்டத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.