வைகோ கலந்துகொண்ட நிகழ்ச்சியில் தொண்டர் தீக்குளிப்பு!

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக வைகோ பங்கேற்ற நிகழ்ச்சியில் சிவகாசியை சேர்ந்த தொண்டர் ரவி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மதுரை, தேனி மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும் இந்த திட்டத்தை கைவிடக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நியூட்ரினோ திட்டத்தை கைவிட வலியுறுத்தியும், மக்களிடம் நியூட்ரினோ எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் 10 நாள் நடைபயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.

அதன்படி மதுரை பழங்காநத்தத்தில் இருந்து இன்று காலை தனது நடைபயணத்தை தொடங்கினார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று வைகோவின் நடைபயணத்தை தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில் பழங்காநத்தம் மேடை அருகே ரவி என்ற தொண்டர் ஒருவர் தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதிமுக தொண்டர் தீக்குளித்ததை பார்த்த வைகோ கண்ணீர் விட்டார்.

தீக்குளித்த தொண்டரை காப்பாற்ற இயற்கை அன்னையிடம் கெஞ்சுகிறேன். தீக்குளித்த தொண்டரை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யுங்கள் என கூறினார்.

மதிமுக தொண்டர் ரவி தீக்குளித்ததால், வைகோ மேடையில் கண்ணீர் மல்க பேசினார். ரவி நலம் பெற இயற்கை அன்னையை வேண்டி, நடைபயணத்தை தொடங்குகிறேன் என கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்