அபார வளர்ச்சியை தொட்டு நிற்கும் துளிர்ப்பு-போரால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு கைகொடுக்கும் புலத்து இளையோர்கள்!

சிங்கள பௌத்த பேரினவாத அரசின் இனப்படுகொலை யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தாயக இளையோரிற்கு உதவும் முகமாக ‘துளிர்ப்பு’ திட்டத்தின் மூலம் ஜேர்மன் வாழ் ஈழத்தமிழ் இளையோர் நிதி சேகரித்துள்ளார்கள்.

‘ஒரு நாள் ஒரு சதம்’ சேமிப்போம் என்ற அடிப்படியில் ‘துளிர்ப்பு’ அமைப்பினரால் வழங்கப்படும் உண்டியலை தமது வீடுகளில் வைத்து கடந்த ஓராண்டு காலத்தில் சேமித்த தொகையை தாயக இளையோரிற்காக வழங்கும் நிகழ்வு ஜேர்மனியில் நடைபெற்றுள்ளது.

ஜேர்மன் வாழ் ஈழத்தமிழ் இளையோரால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டுவரும் இச் செயற்பாடானது  நான்காவது ஆண்டாக தொடர்ந்து வருகிறது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதரங்களை பறிகொடுத்து கல்விச் செயற்பாடுகளை தொடர முடியாது தவித்துவரும் தாயக இளையோருக்கு கைகொடுத்து உதவும் வகையில் இந்நிதி சேகரிப்பு இடம்பெற்று வருகிறது.

புலம்பெயர்ந்து வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் சிறுவர்களின் மனதில் ஈழம் குறித்த ஆழமான பற்றுதலை ஏற்படுத்தும் விதமாகவே இச்செயற்பாடு அமைந்துள்ளது. தமக்கு விருப்பமானவற்றை வாங்கி மகிழும் வயதில் தம்மைப் போன்ற சக சிறுவர்களின் நல் வாழ்விற்காக தினமும் சிறு தொகைப் பணத்தை சேகரித்து வழங்க வேண்டுமென்ற உந்துதலை அவர்களுக்குள் ஏற்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் அவர்கள் நாட்டுப்பற்று, மனிதாபிமானம் மிக்கவர்களாக செதுக்கப்படுகிறார்கள்.

நான்காவது ஆண்டாக முன்னெடுக்கப்படும் ‘துளிர்ப்பு’ திட்டத்தின் மூலம் இம்முறை  9751,65€  சேகரிக்கப்பட்டுள்ளது. இத்தொகையானது பதிவு செய்யப்பட்ட தொண்டு நிறுவனத்தின் மூலம் அனுப்பிவைக்கப்பட உள்ளதாக ‘துளிர்ப்பு’ அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள்.

 

ஈழதேசம் இணையம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்