உடைந்தது உதயசூரியன் கூட்டணி – ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியும் வெளியேறியது

வவுனியா உள்ளூராட்சி சபைகளில், ஐதேக, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன முன்னணி போன்ற சிங்களப் பேரினவாதக் கட்சிகளுடனும், ஈபிடிபியுடனும் இணைந்து ஈபிஆர்எல்எவ் ஆட்சியமைக்க மேற்கொண்ட நடவடிக்கைகளால் அதிருப்தியடைந்து, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணியில் இருந்து ஜனநாயக தமிழ் அரசுக் கட்சி வெளியேறியுள்ளது.

கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக் கூட்டணி, ஜனநாயக தமிழ் அரசுக் கட்சி புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து- தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டணி என்ற அமைப்பை உருவாக்கி – உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருந்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கைகளால் அதிருப்தியடைந்து, அதிலிருந்து வெளியேறிய கட்சிகள் மற்றும் ஏனைய கட்சிகள் கூட்டமைப்புக்கு மாற்றான அணி என்று தம்மை பிரகடனம் செய்திருந்தன.

உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் இந்த அணியில் இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் கட்சி வெளியேறியது. தமக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை என்றும், ஈபிஆர்எல்எவ் சர்வாதிகாரத்தனத்துடன் நடப்பதாகவும் அதனை ஆனந்தசங்கரி கண்டு கொள்ளவில்லை என்றும் அந்தக் கட்சி குற்றம்சாட்டியிருந்தது.

இந்த நிலையில், இந்தக் கூட்டணியில் இருந்து நேற்று விலகிக் கொள்வதாக ஜனநாயக தமிழ் அரசுக் கட்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜனநாயக தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது –

தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் கொள்கையில்லை. ஜனநாயகத் தன்மை இல்லை சர்வாதிகாரம் காணப்படுகின்றது. எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் அரசாங்கத்துடன் சரணகதி அரசியல் நடாத்துகிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை எனும் அடுக்கடுக்கான பல்வேறு விதமான குற்றச்சாட்டுடன் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பை ஏற்படுத்தி தமிழர் விடுதலை கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் ஐந்து கட்சிகள் இணைந்து ஒப்பந்தத்தின் அடிப்படையில் போட்டியிட்டோம்.

உள்ளுராட்சி மன்றங்களில் எவருக்கும் ஆதரவு வழங்குவதில்லை எனும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

அதற்கு மாறாக வவுனியாவில் ஈ.பி.ஆர்.எல்.எப் நடந்து கொண்டது அரசியல் அநாகரிகம். கொள்கையில்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டு வைக்கிறது என குற்றஞ்சாட்டி விட்டு அதே வேலையை எம்மால் செய்ய முடியுமா?

பதவி பெறுவது தான் முக்கியம் என்றால் எதற்காக இந்த கூட்டில் நாம் தொடர வேண்டும். கொள்கையில்லாத தமிழ் தேசிய நீக்கத்தை ஏற்படுத்தும் நோக்கிலான கூட்டில் நாம் தொடர விரும்பவில்லை என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வவுனியாவில் பொது எதிரியாகிய தேசிய கட்சிகளுடன் கை கோர்த்தமையை வன்மையாக கண்டிக்கின்றோம்.

தமிழ்த் தேசிய விடுதலைப் போக்கை கொள்கையற்ற பதவி ஒரு போதும் சமப்படுத்தப் போவது இல்லை. பதவி பெறுவது விடுதலை அரசியலுக்கு அறமும் இல்லை.

இன அழிப்பை ஏற்படுத்திய தேசிய கட்சிகளுடனும் காட்டி கொடுத்து கூட்டி கொடுத்த தேச விரோத ஈ.பி.டி.பி, கருணா குழு போன்றவற்றுடன் வாக்களித்த மக்களின் விருப்புக்கு மாறாக ஆட்சி அமைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அநாகரிக பிற்போக்குதனத்தை நாமும் பின்பற்றுவது அதை விட அசிங்கமாகும்.

ஆகவே தமிழ்த் தேசியத்துக்கு மாறானவர்களுடன் இணைந்து பதவி இலாபம் தேடியதால் இந்த கொள்ளையற்ற கூட்டில் தொடர முடியாது என நாம் தீர்மானித்து அக் கூட்டணியில் இருந்து இன்று முதல் உத்தியோகபூர்வமாக வெளியேறுகின்றோம்.

அரசியலில் எந்த சந்தர்ப்பத்திலும் ஆதாய சூதாடியாக நாம் இருக்க விரும்பவில்லை என்பதில் திடமான கொள்கையில் பயணிப்பவர்கள் நாம்.

ஆகவே இவ்வாறான பதவி, சுகபோகங்களுடன் கூட்டிணைந்தமைக்காக மக்களிடம் மன்னிப்பு கோருகின்றோம்.

காலம் இவர்களுக்கு தகுந்த பதில் வழங்கும் என்பதில் எமக்கு மாற்றுக் கருத்து இல்லை” என கூறப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்