இரு பீரங்கிப் படகுகளை இழந்த நாளில் சிறிலங்கா கடற்படைக்குப் புதிய போர்க்கப்பல்

சிறிலங்கா கடற்படைக்காக இந்தியாவில் கட்டப்பட்ட இரண்டாவது ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இன்று கொழும்பு துறைமுகத்தில் அதிகாரபூர்வமாக கடற்படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

பி-624 தொடர் இலக்கம் இடப்பட்டுள்ள இந்தப் போர்க்கப்பலுக்கு எஸ்எல்என்எஸ் சிந்துரால என்று பெயரிடப்பட்டுள்ளது.

கோவா கப்பல் கட்டும் தளத்தில் கட்டப்பட்ட இந்தப் போர்க்கப்பல் அண்மையில் சிறிலங்கா கடற்படையிடம் கையளிக்கப்பட்டு, கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இன்று இந்தப் போர்க்கப்பல் சிறிலங்கா கடற்படையில் அதிகாரபூர்வமான இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் இந்தியக் கடற்படையின் துணைத் தளபதி வைஸ் அட்மிரல் அஜித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளார்.

1995ஆம் ஆண்டு ஏப்ரல் 19ஆம் நாள், திருகோணமலை கடற்படைத் தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் ரணசுறு, சூரய ஆகிய அதிவேக பீரங்கிப் படகுகளை கடற்கரும்புலிகள் மூழ்கடித்திருந்தனர்.

இந்த தாக்குதலுடன் தான், சந்திரிகா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் தவிர்ப்பு உடன்பாடு முடிவுக்கு வந்ததுடன், மூன்றாம் கட்ட ஈழப்போர் வெடித்தது.

இரண்டு பீரங்கிப் படகுகளை இழந்த – மூன்றாம் கட்ட ஈழப்போர் வெடித்த – அதே நாளில் சிறிலங்கா கடற்படை தனது புதிய போர்க்கப்பலுக்கான ஆணையை வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்