முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு வரும் அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை!

எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை உணர்வுபூர்வமாக அனுஸ்டிப்பதென்ற பேரில் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு துணைபோனவர்களோ அல்லது இப்போது முண்டுகொடுத்துக்கொண்டிருப்பவர்கள் எவரேனுமே தமக்கு அரசியல் வெள்ளையடிக்கும் நோக்கத்துடன் அங்கு வருகை தந்தால் அவர்களிற்கான எதிர்வினை கடுமையாக இருக்குமென வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் அறிவித்துள்ளன.

முதலில் அவர்கள் இனஅழிப்பிற்குள்ளானவர்களது குடும்பங்கள் முன்னிலையிலும் தமிழ் மக்களின் முன்னிலையிலும் தமது தவறுகளிற்கு பொதுமன்னிப்பு கோரவேண்டுமென தர்மகுலசிங்கம் நடராசா(63 வயது) தெரிவிக்கின்றார்.இறுதி யுத்தத்தில் தனது குடும்பத்தை பறிகொடுத்த அவர் முல்லைதீவில் துயரங்கலந்த தனது வாழ்வின் இறுதி காலத்தை வலிகளுடன் கடந்து கொண்டிருக்கின்றார்.

முல்லைதீவில் போராட்டத்தை முன்னெடுத்துள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் சார்பில் பல்கலைக்கழக மாணவர்களது முயறசிக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளநிலையில் தமது நிலைப்பாட்டையயும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னின்று நடத்த யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முற்பட்டுள்ளது. அது ஒற்றுமை என்ற பேரில் எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை நீர்த்துப் போகச்செய்யும் நோக்கமோ, தமிழர்க்கான நீதிவேண்டிய பயணத்தில் முட்டுக்கட்டைகளாக இருப்போரை அரவணைக்கும் நோக்கமோ, தனிப்பட்ட கட்சிகளுக்கோ அரசியற் பிரமுகர்களுக்கோ மேடையமைத்துக் கொடுத்து சிலருக்கு அரசியல் இலாபம் தேடிக்கொடுக்கும் நோக்கமோ தமது ஒன்றுபட்ட நிகழ்வுக்கான அழைப்பின் பின்னால் இல்லையென யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்துமுள்ளது.

இந்நிலையில் மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டை வரவேற்றுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்கள் சொன்னதை உறுதியாக கடைப்பிடிக்க மாணவர் ஒன்றியம் முன்வந்தால் தமது முழுமையான ஆதரவை நல்கமுடியுமெனவும் தெரிவித்துள்ளது.

ஆனாலும் கடந்த ஆண்டு போல இம்முறையும் வெள்ளையடிக்க சிலரை கொண்டுவர நாடகங்கள் நடப்பதாக முன்னாள் போராளியான சிவகரன் (32வயது) தெரிவித்தார்;.முதலில் அவர்கள் மக்கள் முன்னர் தமது கடந்த கால நடவடிக்கைகளிற்கு மன்னிப்பு கோரட்டும்.பின்னர் பார்க்கலாம்.ஆனால் அதனை தாண்டிவந்தாhல் இம்முறை அவர்கள் திரும்பிச்செல்கையில் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத வலியிருக்குமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கடந்த ஆண்டில் இரா.சம்பந்தன்,மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை தருவித்து வெள்யைடிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிசுபிசுத்து போய்விட்டது.மக்களின் உணர்வின் முன்னால் இரட்டை வேடதாரிகள் கலைக்கப்பட்டது பகிரங்கமானது.

இவர்களை தருவித்து வெள்ளையடிக்கவும் அதன் மூலம் தமிழரசுள் உள்நுழையும் பேரத்தையும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அரங்கேற்ற முற்பட்டு அம்பலமாகியுமிருந்தார்.
கடந்த ஆண்டு வடமாகாணசபை,தமிழ் தேசிய மக்கள் முன்னணி,மதப்பிரதிநிதிகளென பல தரப்புக்களும் தனித்தனியாக நினைவேந்தலை நடத்தியிருந்தன.

இந்நிலையில் வெறுமனே குளிரூட்டப்பட்ட வாகனங்களில் வந்திறங்கி விளக்கேற்றிவிட்டு பின்னர் அதே வாகனத்தில் திரும்புவதாக இம்முறை நினைவேந்தல் இருக்க கூடாதென்பதே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது குடும்பங்களின் நிலைப்பாடாக உள்ளது.

அண்மையில் முல்லைதீவில் நடைபெற்ற நில ஆக்கிரமிப்பிற்கான வடமாகாணசபை உறுப்பினர்களது போராட்டத்தை அவை உதாரணமாக சுட்டிக்காட்டுக்கின்றன.

வெறுமனே 20 நிமிடங்கள் அதுவும் மதிய விருந்தை முடித்த பின்னர் அவர்கள் நடத்திவிட்டு யாழ்ப்பாணத்திற்கு திரும்பிவிட்டதாக அவை நையாண்டி செய்கின்றன.

இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வெறும் விளக்கேற்றி கலைந்து செல்லும் சடங்காக இருக்க கூடாதென்பதே அனைத்து தரப்புக்களதும் எதிர்பார்ப்பாக இருந்துவருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்