இரணைத்தீவில் மீள்குடியேற அனுமதி!

இரணைத்தீவில் மக்கள் தங்களின் சொந்த காணிகளில் மீள்குடியேறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என மீள்குடியேற்றம் புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ் அறிவித்துள்ளார் .

மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் பி.சுரேஸ், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.ராஜபக்ஸ, இலங்கையின் கடற்படை தளபதி ரியர் அட்மிரல் எஸ்.எஸ்.ரணசிங்க தலைமையிலான குழுவினர் இன்று (15) இரணைத்தீவுக்கு விஜயம் செய்தனர்.

இவர்களுடன் கிளிநொச்சி மாவட்ட செயலர் சுந்தரம் அருமைநாயகம், பூநகரி பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்ணேந்திரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் வை.தவநாதன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

அங்கு சென்ற மேற்படி குழுவினர் பொது மக்களை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே மக்களின் காணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 190 குடும்பங்கள் மீள்குடியேற்றப்படுவார்கள். மேலும் இரணைத்தீவில் கடற்படையினர் எட்டு ஏக்கர் நிலத்தில் தொடர்ந்தும் இருப்பார்கள் என்றும் இவர்கள் நாட்டின் பாதுகாப்பு, போதை பொருள் கடத்தலை கட்டுப்படுத்தல், இரணைத்தீவு மக்களின் பாதுகாப்பு என்பவற்றை கருத்தில் எடுத்து தொடர்ந்தும் அங்கிருப்பார்கள் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை இரணைத்தீவு மக்களுக்கான அடிப்படை தேவைகளை மாவட்டச் செயலகம் ஏற்படுத்திக்கொடுக்கவுள்ளது என கிளிநொச்சி மாவட்டச் செயலர் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்