முள்ளிவாய்க்காலில் இன்று மேற்கொள்ளப்பட்ட முக்கியமான தீர்மானங்கள்!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்றுள்ள நிலையில் வடக்கு மாகாண சபை முதலமைச்சர், சீ.வி.விக்கினேஸ்வரனால் சில முக்கியமான தீர்மானங்கள் அங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இருபத்தோராம் நூற்றாண்டின் நவநாகரிக யுகத்தில் மிகப்பெரிய இன அழிப்பிற்கு உள்ளான இனம் நாங்கள் என்பதை இங்கு முன்னிறுத்திய முதலமைச்சர், இன்றைய தினம் மேற்கொள்ளப்படவுள்ள அந்த தீர்மானங்கள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ப்படவேண்டும்.

1.இன்றிலிருந்து ஒவ்வொரு வருடத்தின் மே மாதம் 18ஆம் நாள் தமிழர் இன அழிப்பு நாளாக அங்கீகரிக்கப்பட்டு கடைப்பிடிப்பது.

2.சர்வதேச சமூகமானது விரைவாக இந்த இன அழிப்பிற்கான விசாரணைப் பொறிமுறையை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்கு கால தாமதமின்றித் தலையிடவேண்டும்.

3.தொடர்ச்சியாக கட்டமைப்புசார் இன அழிப்பை எதிர்கொண்டுவரும் இனம் என்ற வகையில் இவற்றைத் தடுக்கும் வகையில் எமக்கான தீர்வை இறைமை, தாயகம், தனித்துவம் என்ற அடிப்படையில் பரிகார நீதியினூடாக பெற்றுத்தர சர்வதேசம் முன்வரவேண்டும்.

4.முள்ளிவாய்க்கால் பேரவலம் இடம்பெற்று ஒன்பது வருடங்களைக் கடந்துள்ளபோதிலும் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் அவலம் இன்னமும் தீர்க்கப்படாத நிலையில், போருக்குப் பின்னரான இன்றைய பேரிடர் நிலைமையாக அதனைக் கருதி, அதற்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்களின் மீள்கட்டமைப்பை ஏற்படுத்த சர்வதேச சமூகம் சமாதான ரீதியான சகலதையும் நேரடியாக வழங்கவேண்டும்.

5.ஆக்கிரமிக்கப்பட்ட தமிழர் தாயக பிரதேசங்களிலிருந்து படையினர் முற்றாக வெளியேற்றப்படவேண்டும். எமது மக்களுக்கு சில நன்மைகளைச் செய்து கொடுப்பது போல் செயற்பட்டு தொடர்ந்து எங்களின் பிரதேசங்களில் முகாமிட்டு இருப்பதையே படையினர் இன்றும் விரும்புகின்றனர். சோழியன் குடுமி சும்மா ஆடாது என்பதை எமது மககள் புரிந்துகொள்ள வேண்டும்.

6.முள்ளிவாய்க்கல் அவலம் நடந்து அடுத்த வருடம் பத்து வருடங்கள் பூர்த்தியடைகின்றன. தமிழ் மக்களின் ஒற்றுமையின் சின்னமாக ஒருமித்த துக்க நாளாக மே பதினெட்டைக் கணித்து, வரும் வருடங்களில் தமிழர்தம் சகல நடவடிக்கைகளையும் ஒன்றிணைத்து குழு அமைத்து இந்த நினைவேந்தலை கட்சி பேதமின்றி பிராந்திய பேதமின்றி கொண்டு நடத்தவேண்டும். இன்றைய தினத்தில் ஒன்பது வருடங்களுக்கு முன்னர் இதே மண்ணில் அநியாயமாக கொன்றொழிக்கப்பட்ட எமது உறவுகள் அனைவரதும் ஆத்மாக்கள் சாந்தியடையவேண்டும் என்று பிரார்த்திப்போமாக.

இங்கு வந்திருக்கும் அவர்களின் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை வெளிப்படுத்துவோமாக. எமது பிரார்த்தனைகள் எமது மக்களுக்கு ஓரளவு அமைதியை ஏற்படுத்தும் என நம்புகின்றோம்.

போன்ற தீர்மானங்கள் இன்றைய தினம் முதலமைசரால் மேற்கொள்ளப்பட்டன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்