வட மாகாணத்திற்கான சுற்றுலாத்துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்ற கனவு நனவாகின்றது! முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன்

வடமாகாணத்தில் முதன் முதலாக சுற்றுலாப் பயணத்துறை பணியகம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே வட மாகாணத்திற்கான சுற்றுலாத்துறை ஒன்றை அமைக்க வேண்டும் என்ற வட மாகாணசபையின் கனவு நனவாகின்ற ஒரு நல்ல நாள் இன்று என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“2013ல் வடமாகாணசபை தனது நிர்வாகப் பொறுப்பை ஏற்ற நாளில் இருந்து வட பகுதியின் சுற்றுலாத்துறை மேம்படுத்தப்பட வேண்டும் என்ற அவாவில் உரிய முயற்சிகள் பலவற்றை முன்னெடுத்த போதும் இதற்குரிய நியதிச்சட்டம் தயாரித்தல், உரிய அனுமதியைப் பெற்றுக்கொள்ளல் போன்ற பற்பல தடங்கல்களால் இதுவரை காலமும் இந்த சுற்றுலாத்துறைப் பணியகம் எம்மால் அமைக்கப்பட முடியாது போயிற்று.

நீண்ட காலப்போருக்குப் பிந்திய வளர்ச்சிப் பாதையில் சுற்றுலாத்துறை மிக முக்கிய பங்கை வகிக்கக்கூடியது. வட மாகாணத்தில் பல சுற்றுலா மையங்கள் இயற்கை வளங்களுடன் கூடியதாக அமைந்துள்ள போதும் அவற்றை புனரமைப்புச் செய்வதற்கும் சுற்றுலா மையங்களாக மாற்றி அமைப்பதற்கும் இதுவரை காலமும் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் இனி தீர்க்கப்படுவன.

எனவே சுற்றுலா மையங்கள் புனரமைப்புச் செய்யப்படும் போது இலகுவில் அந்த இடத்தை சென்றடையக்கூடிய வழிவகைகளையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். வேறு முக்கிய கட்டமைப்புக்களையும் நாம் அமைக்க வேண்டும்.

வட மாகாணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற சுற்றுலா அபிவிருத்தி பணிகள் அனைத்தும் இப் பகுதி மக்களின் நன்மைகளையும் வாழ்வாதார முன்னேற்றங்களையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.மேலும் வட பகுதிக்கான கலாச்சாரம், பண்பாடு, பழக்கவழக்கங்கள் பிறழ்வு அடையா வண்ணம் எமது அபிவிருத்திகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.மத்திய அரசும் அதன் முகவர்களும் எமது ஒவ்வொரு முன்னெடுப்புக்களையும் மிகக் கவனமாக உற்று நோக்கிய வண்ணம் உள்ளனர் போல் தெரிகிறது.

நீங்கள் உங்கள் சுற்றுலாத்துறைப் பணிகளை முன்னெடுக்கும் போது உங்களுக்கு பலவிதமான அழுத்தங்களையும் இடர்பாடுகளையும் தருவதற்கு வனத்துறை, நில அளவைத்திணைக்களம், கனியவளத் திணைக்களம், கடலோரப்பாதுகாப்பு சபை, வனவிலங்குப் பாதுகாப்பு துறை என பல துறைகள் தயார் நிலையில் இருக்கின்றன.

வடமாகாணத்தின் யாழ்குடா நாட்டுப்பகுதி மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ளதுடன் நிறைந்த கடல் உணவு வளங்களைக் கொண்ட ஒரு பிரதேசம்.

எனவே இவ் வளங்கள் எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கே பயன்பட வேண்டும். ஓரிரு வாரங்களுக்கு முன்னர் ஆழியவளைப்பகுதியில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டிருந்த மீனவர் ஒருவருக்கு 20 ஆயிரம் கிலோவிற்கும் அதிகமான பாரை மீன்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அதனால் ஒரே இரவில் அந்த மீனவர் கோடீஸ்வரராக மாறிவிட்டார் எனவும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தன.

அந்த விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டு ஒரு வாரம் கடக்க முன்னரே அப் பகுதியில் சிங்கள மீனவர்களின் ஆக்கிரமிப்பு இடம் பெற்றது என்று அறிகின்றேன். அவர்களுடன் எமது மீனவர்களும் பொதுமக்களும் அரசியற் தலைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு நிலை ஏற்பட்டுள்ளது.

எமது ஒவ்வொரு அசைவுக்கும் பிறர்தரப்பில் இருந்து பல முனைத் தாக்குதல்கள் பொருளாதார ரீதியாகவும், தொழில் முயற்சி வடிவிலும்வந்து கொண்டிருப்பதாக நாம் உணர்கின்றோம்.எமது சமூக, கலாச்சார, பண்பாட்டு விழுமியங்கள் ஆகிய அனைத்தையும் சீரழிக்க சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கின்றார்கள் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

ஆகவே உங்களால் முன்னெடுக்கப்பட இருக்கின்ற ஒவ்வொரு செயற்பாடுகளும் வட மாகாணசபையின் வளர்ச்சிக்கும் இப் பகுதியில் உள்ள மக்களின் மேம்பாட்டை மையப்படுத்துவதற்கும் ஏற்றவாறு இருக்கும் என்று நம்புகின்றேன் என குறிப்பிட்டார்.(

About இலக்கியன்

மறுமொழி இடவும்