மயிலிட்டி ஆயுதக் கிடங்கு வெடிப்பில் 600 இற்கு மேற்பட்ட இராணுவத்தினர் பலியாகிய உண்மை அம்பலம்!

மயிலிட்டி ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியதில் 600 இற்கு மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் உயிரிழந்திருத உண்மை அம்பலமாகியுள்ளது.

உயர்பாதுகாப்பு வலையப் பகுதியாக திகழ்ந்திருந்த மயிலிட்டிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தின் மிகப்பெரும் ஆயுதக் களஞ்சியம் அமைக்கப்பட்டிருந்தது. வட பகுதியில் நிலைகொண்டிருந்த இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் இங்கிருந்தே வழங்கப்பட்டு வந்திருந்தது.

இந்நிலையில் கடந்த 2009 ஜூன் மாதம் 6 ஆம் திகதி அதாவது 2009 மே18 அன்று விடுதலைப் புலிகள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்யப்பட்டு மிகக் குறுகிய காலத்தில் இவ் ஆயுதக் கிடங்கு வெடித்துச் சிதறியிருந்தது. அங்கு களஞ்சியப் படுத்தப்பட்டிருந்த பெருந்தொகையான ஆயுத தளபாடங்கள் முற்றிலுமாக அழிவடைந்திருந்தமை ஏற்கனவே அறியப்பட்டிருந்தது.

ஆனால் இவ் வெடிப்புச் சம்பவத்தில் 600 இற்கு மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் உடல் சிதறிப் பலியாகியிருந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து சம்பவத்தன்று மயிலிட்டி துறைமுகத்தில் பணியில் இருந்த ஒருவர் கூறும்போது…

மயிலிட்டித் துறைமுகத்தின் ஊடாக கப்பலில் இருந்து பொருட்களை இறக்கும் பணிக்கு வழக்கம் போன்று அன்று நாங்கள் 47 பேர் அனுமதிபெற்று சென்றிருந்தோம். அப்போது சுமார் 600 இற்கு மேற்பட்ட சிறிலங்கா இராணுவத்தினர் ஆயுதக் கிடங்கு இருந்த இடத்தை நோக்கி மண்வெட்டிகள், அலவாங்குகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் சென்றிருந்தனர்.

நாங்கள் பொருட்களை இறக்கிக் கொண்டிருந்த போது வெடிப்பு சத்தம் ஒன்று கேட்டது. அதைத் தொடர்ந்து தொடர்ச்சியான வெடிப்பு இடம்பெற்றது. அங்கு வெடித்துச் சிதறிய குண்டுகள் துறைமைகப் பகுதியிலும் கடலிலும் வந்து விழத்தொடங்கியது. நிலைமை மோசமடைவதை உணர்ந்து அங்கிருந்தவர்களை கப்பலில் ஏற்றிக்கொண்டு ஆழ்கடல் பகுதிக்கு கொண்டுசென்றிருந்தார்கள்.

பல மணிநேரங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வெடிப்பு அடங்கியதுமே நாம் கரைக்கு அழைத்து வரப்பட்டிருந்தோம். அப்போதுதான் தெரிந்தது தாமதாமச் சென்றிருந்த பெண் இராணுவ வீரர் ஒருவர் உள்ளிட்ட சிலர் காயமடைந்திருந்த நிலையில் நாங்கள் வரும்போது சென்றிருந்த சுமார் 600 இற்கு மேற்பட்ட இராணுவத்தினரில் ஒருவர் கூட உயிர் தப்பியிருக்கவில்லை என்று அவர் மேலும் கூறியிருந்தார்.

போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக கூறப்பட்ட வெகு சில நாட்களில் நடைபெற்றிருந்த இவ் ஆயுதக் கிடங்கு வெடிப்பு சம்பவத்தில் ஏற்பட்டிருந்த பெருமளவு உயிரிழப்பினை சிறிலங்கா இராணுவத்தினர் மறைத்திருந்தமை தற்போது அம்பலமாகியுள்ளது. இதே போன்று 2009 ஜூன் 9 ஆம் திகதி வவுனியா ஜோசப் முகாம் பகுதியில் இருந்த ஆயுதக் கிடங்கும் வெடித்து சிதறி முற்றாக அழிவடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஈழதேசம் இணையம்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்