சுமந்திரனிற்கு கண்டனம்:ஆனாலும் அவர் தேவையென்கிறது டெலோ!

சமஸ்டி பற்றி எங்களுக்கு போதிய அறிவு இல்லை என சொல்லப்பட்ட விடயம் சொல்லப்பட்டிருக்க கூடாது. அதனை தவிர்த்திருக்கவேண்டும் என்கிறார் ரெலோவின் பேச்சாளர் சிறிகாந்தா.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளுக்கு கூட சமஸ்டி பற்றிய விளக்கம் இல்லை என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பாக இன்று பதிலளிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, சுமந்திரன் இத்தகைய கருத்தை தெரிவித்ததற்கு எமது கண்டனங்களை பதிவு செய்கின்றோம். அதேவேளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் சுமந்திரனின் செயற்பாடுகளை ஏற்றுக்கொள்கின்றோம்.

அதேபோல் காலங்காலமாக எம்மால் கூறப்பட்ட வடக்கு கிழக்கு இணைப்பை ஏற்றுக்கொண்டு இணைப்பாட்சி அடிப்படையில் தீர்வு வரவேண்டும் என்பதே எமது கோரிக்கை. அதற்கு ஏற்றவாறு சிங்கள தேசமானது தமிழர் தேசத்திற்கான தீர்வை முன்வைக்கவேண்டும்.

அதேவேளை பாராளுமன்ற உபகுழுக்களின் தலைவராக செல்வம் அடைக்கலநாதன் செயற்படுவது என்பதை தனியாக பார்க்கவேண்டும். அதனை வைத்து சமஸ்டியை கைவிட்டுவிட்டதாக யாரும் சொல்லமுடியாது.

இதனையே 1985 ஆம் ஆண்டிலிருந்து ரெலோ கூறிவருகின்றது என்பதை திட்டவட்டமாக பதிவு செய்யவிரும்புகின்றோம்.

முதல்வர் விக்கினேஸ்வரனது அணியில் சேர்ந்துகொள்ளும் எண்ணமும் எமக்கு இல்லை. தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் அரசியலையும் நாம் ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்