ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை – சுமந்திரன் எச்சரிக்கை!

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை மூன்றாவது தடவையாகவும் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அவரை, பதவி நீக்கம் செய்யாவிட்டால் ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற குழப்பநிலையினைத் தொடர்ந்து சபை அமர்வுகள் எதிர்வரும் 19ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே எம்.ஏ சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “மஹிந்த ராஜபக்ஷவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசமைப்புக்கு முரணாகவே நியமித்துள்ளார். இங்கு ஜனாதிபதியே அரசமைப்பை மீறியுள்ளார்.

இது சட்டவிரோதமானது, ஜனநாயகத்துக்கு முரணானது. இதனை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே, இதனை எதிர்த்தோம். இது தொடர்பில் நாம், ஜனாதிபதியை சந்தித்தபோது எமது தீர்மானத்தை மாற்றக் கோரினார். இல்லாதுவிட்டால் நடுநிலைமை வகிக்குமாறு கோரினார். நாம் யாருக்கும் ஆதரவானவர்கள் அல்லர்.

அரசமைப்பு, சட்டம் ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் காரியங்கள் இடம்பெறவேண்டும் என்பதே எமது நோக்கம். அதனடிப்படையிலேயே, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ அரசமைப்புக்கு முரணாக நியமிக்கப்பட்ட விடயத்தில் நாம், மூன்றாவது தடவையாகவும் நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவந்து பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியுள்ளோம்.

எனவே, மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவிலிருந்து நீக்க ஜனாதிபதி உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையே ஜனாதிபதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நேரிடும்“ என தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்