ஹாட்லியின் மைந்தர்களது 19 வது நினைவேந்தல் உணர்வுபூர்வமாக கடைப்பிடிப்பு!

கல்வி செயற்பாட்டின் நிமித்தம் வடமராட்சி இன்பர்சிட்டி கடற் பகுதியில் 1999 ஆம் ஆண்டின் இதே நாளில், கடல்வள ஆராட்சியில் ஈடுபட்டிருந்தவேளை கடல் அலையில் சிக்குண்டு உயிரிழந்திருந்த யாழ்.ஹாட்லி கல்லூரியின் 2000 ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களின் 19 ஆவது ஆண்டு, மற்றும் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக கல்வி கற்றுவந்த வேளை புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்த மாணவனது 14 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வடமராட்சி இன்பர்சிட்டி கடற்கரையில் உணர்வுபூர்வமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 17/11/1999 அன்று கடலோடு கடலாக சங்கமித்திருந்த, பூரணமூர்த்தி-கந்தர்வன், சிவநாதன்-இரவிசங்கர், சுந்தரலிங்கம்-சிவோத்தமன் மற்றும் பாலகிருஸ்ணன்-பிரதீபன் ஆகியோருடன் பேராதனை பல்கலைக் கழகத்தில் பொறியியல் பீட மாணவனாக இருந்த பொழுதில் 17/05/2004 அன்று இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி சாவடைந்திருந்த மரியரட்ணம்-குணரட்ணம் ஆகியோரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஒன்றிணைந்து இந்நினைவேந்தல் நிகழ்வை நடத்தியுள்ளார்கள்.

குறித்த மாணவர்களது திருவுருவப்படம் வைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பமான உணவுவகைகள் படையலிட்டு மேற்கொள்ளப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மலர்தூவி, சுடரேற்றி நினைவு வணக்கம் செலுத்தியிருந்தார்கள். இறுதியில் படையல் பொருட்கள் மற்றும் மாலை, பூக்கள் என்பன மாணவர்களின் ஆன்மா இரண்டறக் கலந்திருக்கும் இன்பர்சிட்டி கடலில் கலக்கப்பட்டது.

இதேவேளை இம்மாணவர்களது நினைவாக நேற்றைய தினம் (வெள்ளி) ஹாட்லி கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் மாணவர்களுக்கான ஊக்குவிப்பு நிதி உதவிகள் வழங்கி வைக்கப்பட்டிருந்ததுடன் இரத்ததான முகாமும் நடத்தப்பட்டிருந்தது.

ஹாட்லியின் மைந்தர்கள் நினைவு நிதியத்தின் ஏற்பாட்டில் ஹாட்லி கல்லூரியில் கல்வி பயின்றுவரும் உயர்தர வகுப்பு மாணவர்களில் பொருளாதார ரீதியில் பிந்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பத்து மாணவர்களை தெரிவு செய்து அவர்களது கல்வி செயற்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பணத்தொகை வழங்கப்பட்டது. இவ்வாறு ஒவ்வோர் ஆண்டும் தெரிவுசெய்யப்படும் பத்து மாணவர்களுக்கு உதவுதொகை வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

அத்துடன், யாழ்.ஹாட்லி கல்லூரி ரீதியில் பிரத்தியேகமாக நடாத்தப்பட்டிருந்த பொது அறிவு போட்டிப்பரீட்சையில் வெற்றியீட்டிய 28 மாணவர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது. ஹாட்லி கல்லூரி மற்றும் சகோதர பாடசாலைகளாக விளங்கிவரும் மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை, வட இந்து மகளிர் கல்லூரி ஆகியவற்றிற்கும் கல்வி செயற்பாடுகளை ஊக்குவிக்கும் வகையில் சிறு தொகை அன்பளிப்பு வழங்கி சிறப்பிக்கப்பட்டிருந்தது. மேலும், உயிரிழந்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து யாழ். போதனா வைத்திய சாலையின் இரத்த வங்கியினர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட நடமாடும் குருதிக்கொடை முகாம் ஹாட்லி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இக்குருதிக் கொடை முகாமில் ஹாட்லி கல்லூரியின் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என 47 பேர் இரத்த தானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் படங்கள் தாயகத்தில் இருந்து இரா.மயூதரன்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்