வாக்கு வங்கிக்கு பாதகமாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் செயற்படாது: சுரேஸ்

வாக்கு வங்கிக்கு பாதகமான விடயங்களை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒருபோதும் செய்யாது என ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அந்த இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எந்தவிதமான நிபந்தனையுமின்றி வழங்கப்பட்ட ஆதரவுடன் தற்போது புதிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தில் தமிழர்களுக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கமே தனது நிலைப்பாட்டினைத் தெளிவுபடுத்தவேண்டும்.

இந்நிலையில் உதாரணமாக அரசியல் கைதிகளின் விடயத்தில் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் என்ன நிலைப்பாட்டினை எடுக்கப்போகின்றது என்பதைக் கூறமுடியாது. ஏனெனில் தென்னிலங்கையில் இவ்விடயமானது பாரிய எதிர்ப்பு அரசியலை ஏற்படுத்தும்.

இதேபோலவே அரசியலமைப்பு மற்றும் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் காணப்படுகின்றன. எனவே இவ்விடயங்களுக்காக தனது வாக்கு வங்கிக்கு பாதகமாக ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் செயற்படாது.

முக்கியமாக இப்போது பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மிகக் குறுகிய காலத்திற்குள் பல தேர்தல்களைச் சந்திக்கவுள்ளதால் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கம் தீர்வினை முன்வைப்பது மிகவும் கடினமானதொன்றாகவே அமையும்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்