சுதந்திரக் கட்சியுடன் இணைந்து ஒரே வேட்பாளர் – மகிந்த

அடுத்த அதிபர் தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து ஒரே வேட்பாளரை நிறுத்தும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லவில் நேற்று, பொதுஜன முன்னணி தலைமையகத்தில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“நாங்கள் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தமாட்டோம். சரியான நேரத்தில் எமது வேட்பாளரை அறிவிப்போம். இப்போது நாங்கள் ஒரு பரந்தளவிலான கூட்டணி ஒன்றை உருவாக்க முயற்சிக்கிறோம்.

சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், அதிபர் மைத்திரிபால சிறிசேன கட்சியை வலுப்படுத்தி வருகிறார். ஒரு கூட்டணியை உருவாக்குவதற்கு இதனால் தடை ஏற்பட்டாது” என்று தெரிவித்தார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 18 நாடாளுமன்ற உறுப்பினர்களுடன், சந்திரிகா குமாரதுங்க ஐக்கிய தேசியக் கட்சியில் இணையவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த மகிந்த ராஜபக்ச, சுதந்திரக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று தான் நம்பவில்லை என்று கூறினார்.

“அவர்கள் ஐதேகவுடன் இணைந்தால், ஐதேகவுக்குள் ஏற்கனவே உள்ள உட்கட்சி பிரச்சினைகளை தீவிரப்படுத்தும். சந்திரிகா குமாரதுங்கவை நாம் அதிபர் வேட்பாளராக களமிறக்கப் போவதில்லை.” என்றும் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்