40 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை அறிவித்தார் சீமான்.. தேர்தலுக்கு ரெடியாகிறது நாம் தமிழர்!

தமிழகம் மற்றும் புதுச்சேரிக்குட்பட்ட 40 லோக்சபா தொகுதிகளுக்கும் கட்டமைப்பு குழுவினரை அறிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி தனித்து களம்காண்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார். மேலும் தமிழகம் மற்றும் புதுவை உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்குமான தேர்தலில் ஆண் வேட்பாளர்கள் 20 பேரும் பெண் வேட்பாளர்கள் 20 பேரும் சரிசமமாக நிறுத்தப்படுவார்கள் என சீமான் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தேர்தலுக்கு தயாராகும் முனைப்பில் நாம் தமிழர் கட்சி சார்பாக மாவட்டவாரி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை நிர்வகிக்க மாவட்டக் கட்டமைப்புக் குழு ஒன்றை சீமான் அறிவித்துள்ளார். அந்த அறிவிப்பில் கூறியிருப்பதாவது

மாவட்டக் கட்டமைப்பு குழு:

இரா.அன்புத்தென்னரசன், மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.இராவணன் , மாநில ஒருங்கிணைப்பாளர்
ஆ.செகதீசன், மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
களஞ்சியம் சிவக்குமார் , மாநில ஒருங்கிணைப்பாளர்
மு.இ.ஹுமாயூன் கபீர் , மாநில ஒருங்கிணைப்பாளர்
ரா.இரமேஷ்பாபு , மாநில மருத்துவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்
ச.சுரேசுகுமார், மாநில வழக்கறிஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்

இவர்கள் எழுவரும் நாம் தமிழர் கட்சியின் மாவட்டக் கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர்களாக இன்று (28-01-2019) அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானால் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களைக் கருத்திற்கொண்டு இக்குழு தமிழகமெங்கும் பயணம் மேற்கொண்டு மாவட்டவாரியாகக் கலந்தாய்வுகளை ஏற்பாடு செய்து மண்டலம் / மாவட்டம் / தொகுதிகளுக்கான புதிய பொறுப்பாளர்கள், பொறுப்பு மாற்றம் மற்றும் பொறுப்பாளர்கள் மாற்றம் போன்ற கட்டமைப்புப் பணிகளுக்கான பரிந்துரைகளை இறுதி செய்வார்கள் .

இறுதி செய்யப்பட்ட பரிந்துரைகள் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் ஏற்கப்பட்டுத் தலைமையகத்திலிருந்து மாவட்டவாரியாக அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும், எனவே மாவட்டக் கட்டமைப்பு குழுப் பொறுப்பாளர்களுக்கு, நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்குமாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்