நாளைய வவுனியா போராட்டம் முக்கியமானது: மக்களை பெருமளவில் கலந்துகொள்ள விக்னேஸ்வரன் வேண்டுகோள்

வவுனியாவில் காணாமல் போன மக்களின் உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்ட பேரணியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் செய்தி ஒன்றை வெளிப்படுத்த வேண்டும் என்று வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற இருக்கும் நீதிமன்ற வழக்கு விசாரணையில் கலந்துகொள்ள வேண்டி இருப்பதால் இந்த போராட்டத்தில் தன்னால் கலந்துகொள்ள முடியவில்லை என்றும் தனது கட்சியின் முக்கியஸ்தர்களும் உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என்றும் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“மனித உரிமைகள் சபையில் நிறைவேற்றப்பட்ட 34/1 தீர்மானம் எதிர்வரும் மார்ச் 2019 ஆம் திகதி காலாவதி ஆகின்றது. இந்த 34/1 தீர்மானத்தில் 2015 ஆம் ஆண்டு இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானத்தை நிறைவேற்றும் வாக்குறுதியை இலங்கை அரசாங்கம் வழங்கி இருந்தது. மனித உரிமைகள் சபையின் கூட்டதொடர் மார்ச் மாதம் ஆரம்பமாகும் போது இலங்கை விடயம் முக்கியமாக கவனத்தில் கொள்ளப்படவிருக்கிறது.இந்த நிலையில் வவுனியாவில் நாளை நடைபெறும் மக்கள் போராட்டம் மிகவும் அவசியமானதும் முக்கியமானதும். இதில் மக்கள் பெருமளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்” என்று செய்தி அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்