கிளிநொச்சி போராட்டத்தில் அடிதடியில் ஈடுபட்ட அடியாட்கள்!

கிளிநொச்சியில் காணாமல் போனவர்களின் உறவுகள் நடத்திய இன்றைய மாபெரும் போராட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் சிலர் கட்சி அரசியல் செய்து,

மோதலில் ஈடுபட்டனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குண்டர்கள் குழுவால் பல்கலைகழக மாணவன் உள்ளிட்ட சிலர் தாக்கப்பட்டனர்.

அறிவிப்பு பணியில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி சேதமாக்கப்பட்டு, ஒலிவாங்கி வயர்கள் அறுத்தெறியப்பட்டன.

இந்த அநாகரிக நடவடிக்கையில் தமிழரசுக்கட்சியின் கரைச்சி பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தலைமையிலான குண்டர்களே ஈடுபட்டதாக பல்கலைகழக மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்துவது குறித்து பல்கலைகழக மாணவர்கள் ஆலோசித்து வருகிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்த இந்த போராட்டத்தின் முன்னணியில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கமே நின்று ஏற்பாடு செய்திருந்தது.

பேரணி ஆரம்பித்த சமயத்தில், காணாமல் போனவர்களின் சங்க பிரதிநிதிகள் தலைமை தாங்க, ஏனைய அரசியல் கட்சிகள் அதன் பின்னால் அணிவகுத்து சென்றனர்.

எனினும், திடீரென கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர்கள் சிலர் ஒலிவாங்கிகளுடன் பேரணியின் முன்னணிக்கு சென்று,

திட்டமிட்டதற்கு மாறான கோசங்களை எழுப்பியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. காணாமல் போனோருக்கான பணியகத்தை நிராகரிப்பதாக போராட்டக்காரர்கள் குறிப்பிட, காணாமல் போனோருக்கான பணியகம் வேண்டுமென “திடீர் போராட்டக்காரர்கள்“ ஒலிவாங்கியில் அறிவித்தனர்.

இதனால் அங்கு குழப்பம் ஏற்பட்டது.

கிளிநொச்சியில் தமிழரசுக்கட்சி- சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்புக்கிடையிலான அரசியல் போட்டி நிலவுகிறது.

அதன் பின்னணியிலேயே இன்றைய குழப்பங்கள் நடந்ததாக தெரிகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்