லஞ்சம் வாங்குபவர்களுக்கு விஷ ஊசி தான் போடப்படும் – சீமான் அதிரடி

“ஒரு பைசா லஞ்சம் வாங்கட்டும்.. விஷ ஊசி போட்டு கொன்றுவிடுவோம்” என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கர்ஜித்துள்ளார்.

வழக்கம்போலவே இந்த தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்து களம் இறங்கி உள்ளது. வேட்பாளர் அறிமுகம் முதல் எல்லாவற்றிலுமே வித்தியாசத்தை கையில் எடுப்பவர் சீமான். அவரது பேச்சை கேட்கவே கூடும் கூட்டம் ஏராளம்!

இப்போது பிரச்சாரம் களை கட்டி உள்ளதால் சீமானின் ஆவேச பேச்சும், ஆக்ரோஷ உணர்வும், ஆங்காங்கே வெடித்து கிளம்பி உள்ளது. நேற்று கூட புதுச்சேரி வேட்பாளர் ஷர்மிளா பேகம், தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி வேட்பாளர் கவுரி ஆகியோரை ஆதரித்து பேசினார்.

அப்போது, “பாஜகவும் காங்கிரசும் சண்டை போட்டுக்கிற மாதிரியே இருக்கும். ஆனா 2 கட்சியும் ஒன்றுதான். நீட் தேர்வைக் கொண்டு வந்தது காங்கிரஸ். அப்போ கூட திமுக, அதை பாராட்டி கடிதம் எழுதியது . பிறகு நீட் தேர்வை செயல்படுத்தியது பாஜக.

ஜிஎஸ்டியை முதன்முதலில் கொண்டு வந்தது காங்கிரஸ். அதனை செயல்படுத்தியது பாஜக. காங்கிரஸ் புள்ளி வெச்சால், பாஜக கோலம் போட்டுடும். பாஜகவுக்கு தனி பெரும்பான்மை உள்ளதால், பிரதமர் மோடி தன் இஷ்டத்துக்கு ஆடுகிறார்” என்றார்.

அதேபோல, இன்று கடலூர் மாவட்டத்திலுள்ள வடலூரிலும் சீமான் பேசியுள்ளார். “ஜெயலலிதாவுக்கு உடம்பு சரியில்லை என்றால் அப்பல்லோ மருத்துவமனை போகிறார். அதே போல் கருணாநிதி காவேரி மருத்துவமனை செல்கிறார். அப்படின்னா அரசு மருத்துவமனையின் நிலைதான் என்ன?

ஜெயலலிதா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் 70 நாளில் போன உயிர் 7 நாளில் போயிருக்கும். அந்த அளவிற்கு அரசு மருத்துவமனையில் தரம் கிடையாது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால், முதலமைச்சர், அரசியல்வாதிகள் முதல் அரசு ஊழியர்கள் வரை அனைவரும் அரசு மருத்துவமனையில்தான் சிகிச்சை பெற வேண்டும் என சட்டம் கொண்டு வருவோம்.

நாட்டில் ஒரு பைசா ஊழல், லஞ்சம் இருந்தாலும் விஷ ஊசி போட்டு கொன்று விடுவோம் என்றும் சீமான் ஆவேசமாக பேசினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்