முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கினைப்போல் பிரித்தானியாவிலும் வழக்குகளைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பின் பணிப்பாளரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான யஸ்மின் சூக்கா தெரிவித்தார்.
இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சித்திரவதைகளை அனுபவித்த நூற்றுக்கு அதிகமானோர் பிரிட்டனிலும் புலம்பெயர்ந்து வாழ்கிறார்கள்.
அந்தவகையில் சித்திரவதைகள் தொடர்பில் பிரிட்டனிலும் வழக்குகளைத் தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என லண்டனில் இடம்பெற்ற ஊடக மாநாட்டினைத் தொடர்ந்து இடம்பெற்ற நேர்காணலில் யஸ்மின் சூக்காவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும்போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
‘நிச்சயமாக அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏனெனில் சித்திரவதைகள் என்பது பன்னாட்டு ரீதியில் தடைசெய்யப்பட்ட குற்றச் செயலாகவே கருதப்படுகின்றது. பிரித்தானியாவிலும் அமெரிக்காவிலும் இவ்வாறு வழக்கு தொடர்வதில் உள்ள வித்தியாசம் என்னவெனில் அமெரிக்காவானது சித்திரவதைக்கு உள்ளானவர்களை பாதுகாப்பதற்கு என தனியான சட்டம் ஒன்றினை நடைமுறைப்படுத்தியுள்ளது.
அந்த சட்டத்தின்படி வழக்கு தொடர்பவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் அந்த நாட்டில் அல்லாது வேறு எந்த நாட்டில் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அந்த சட்டத்தின் கீழ் வழக்கினை தொடர முடியும். ஆயினும் சித்திரவதையை செய்தவர் மீது அழைப்பாணையை வழங்க முடியுமான பட்சத்தில் மாத்திரமே வழக்கை தொடர முடியும்.
பிரிட்டனிலும் இவ்வாறான பல வெற்றிகரமான வழக்குகள் நடைபெற்றுள்ளன. உதாரணமாக நேபாளத்தைச் சேர்ந்த கேணல் தரநிலை இராணுவ வீரர் குணால் லாமா என்பவருக்கு எதிராக பிரித்தானியாவில் வழக்குத் தொடரப்பட்டு அவர் பிரித்தானியாவுக்கு வந்தபோது கைது செய்யப்பட்டார்.
இறுதியில் போர்க் குற்றங்கள் குறித்து அவர் தப்பித்துக்கொண்டாலும் அவரது வழக்கின்போது ஏராளமான கேள்விகளை வழக்கறிஞர்கள் முன்வைத்தார்கள். மேலும் சித்திரவதைகள் தொடர்பாக அதனை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கவேண்டிய கட்டாயம் எல்லா நாடுகளுக்கும் உள்ளது. அதேபோல் சித்திரவதைகளுக்கு பொறுப்பானவர்களை தண்டிக்கும் கடப்பாடும் அதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டைப் பெற்றுக்கொடுக்கும் கடமையும் அந்த நாடுகளுக்கு உள்ளது.
ஆயினும் இவ்வாறான வழக்குகளில் அரசியல் தலையீடுகள் இருப்பதனைத் தவிர்க்க முடியாது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.