லண்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களும் விடுதலை

லண்டனின் லூட்டன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களும், பிரித்தானிய காவல்துறையினரால் எந்த குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படாமல் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

லூட்டன் விமான நிலையத்தில் கடந்த புதன்கிழமை மாலை வந்திறங்கிய நான்கு இலங்கையர்கள், புகலிடம் கோர முற்பட்ட போது, பிரித்தானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டில் தாங்கள் சிறிலங்காவில் வழக்குகளை எதிர்நோக்கியிருப்பதாக, அவர்கள் விமான நிலைய அதிகாரிகளிடம் கூறியிருந்தனர்.

மறுநாள் வியாழக்கிழமை, தடை செய்யப்பட்ட இயக்கம் ஒன்றின் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் அந்த நான்கு பேரையும் கைது செய்திருப்பதாக பிரித்தானிய காவல்துறை கூறியிருந்தது.

அவர்கள், பெட்போர்ட்சைர் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டனர்.

எனினும், இவர்களின் விடுதலை தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், நேற்று பிரித்தானிய ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு கேட்ட போதே, அவர்கள் விடுவிக்கப்பட்ட தகவலை காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும், நால்வரிடமும் விசாரணைகள் தொடரும் என்றும் விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்