கிளிநொச்சியில் புதிய மதுபானசாலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மக்கள் போராட்டம்!

கிளிநொச்சி, கரடிப்போக்கு பகுதியில் புதிதாக அமைக்கப்படவுள்ள மதுபானசாலைக்கு அனுமதி வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து பிரதேச மக்கள் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டம் கிளிநாச்சி, கரைச்சி பிரதேச செயலகம் முன்பாக இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது.

கரடிப்போக்கு பகுதியில் குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைக்கான பிரச்சினைகள் இருக்கும் நிலையில் அதனை நிவர்த்தி செய்து தராது, அப்பகுதியில் மதுபானசாலையை அமைப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன என மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், அப்பகுதியில் இரண்டு பாடசாலைகள் உள்ளதாகவும், இதனால் மதுபானசாலை அமைப்பதில் தமக்கு உடன்பாடு இல்லை எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பாக கரைச்சி பிரதேசசபை வளாகத்தில் பொலிஸார், மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் மதுபானசாலையை அமைக்க வேண்டாம் எனத் தெரிவித்து பலமுறை மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன், மதுபானசாலை ஒன்றை அமைக்க இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அதிக பிரயத்தனம் செய்வதாகவும் மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்