முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுக்கவே பல்கலை. மாணவர்கள் கைது

தமிழினப் படுகொலை – முள்ளிவாய்க்கால் – நினைவேந்தலைத் தடுப்பதற்காகவே சிறிலங்கா அரசு யாழ். பல்கலைக்கழக மாணவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமையை வன்மையாகக் கண்டித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மாணவர்களின் விடுதலைக்காக யாழ்.பல்கலைக்கழக சமூகம் முன்னெடுக்கும் போராட்டங்கள் மற்றும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும் ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செ.கஜேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அவசரகாலச் சட்டம், பயங்கரவாதத் தடைச்சட்டம் என்பவற்றை ஏவி யாழ். பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்தி முள்ளிவாய்க்கால் நிலைவேந்தலை பல்கலைக்கழக மாணவர்கள் தலைமை தாங்கி நடத்துவதனை தடுக்க சிறிலங்கா அரசு மேற்கொள்ளும் சதியே இந்த கைது நடவடிக்கையாகும். அதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு துணைபோகின்றது.

இன்றய தினம் (03) யாழ். பல்கலைக்கழக வளாகத்தினுள் பல்க்கலைக்கழக நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க நுழைந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினர் அப்பாவி மாணவர்கள் இருவரை கைது செய்து பொய்க்குற்றச்சாட்டினை சுமத்தி பொலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பொலீசார் தமது பங்கிற்கு அக்குற்றச்சாட்டுக்களுக்கு மேலும் மெருகூட்டி ஊதிப்பெருப்பித்து மாணவர்களை எப்படியாவது பயங்கரவாதிகளாக்கிவிட வேண்டுமென்பதில் குறியாக இருந்து குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர்.

காலையிலிருந்து இரவு எட்டுமணிவரை வேண்டுமென்றே இழுத்தடித்த பின்னர் இரவு 8.45 மணியளவில் மாணவர்கள் இருவரையும் யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆரோக்கியசாமி பீற்றர்போலின் இல்லத்தில் நீதிபதியின் முன் முன்னிலைப்படுத்தினர்.

அங்கு பிரசன்னமாகியிருந்த சட்டத்தரணிகளான குமாரவடிவேல் குருபரன், கனகரட்ணம் சுகாஸ், கேசவன் சயந்தன் ஆகியோர் மாணவர்களுக்கு பிணை கோரியிருந்தனர். எனினும் பொலீசார் மாணவர்கள் மீது அபாண்டமான பொய்களைச் சோடித்து பிணை வழங்க ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

அதனால் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் நவரத்தினம் திவாகரன், செயலாளர் சிவராசா பவில்ராஜ் ஆகிய இருவரையும் எதிர்வரும் 16-05-2019 வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மற்றும் யாழ் மருத்துவபீட தேநீர்ச்சாலை நடத்துனர் பொன்னம்பலம் ஞானவேல் மீதும் பொய்க் குற்றச்சாட்டுக்களை பதிந்துள்ள பொலீசார் அவரை தொடர்ந்தும் பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர்.

இராணுவத்தினரதும் பொலீசாரதும் இனவெறிச் செயற்பாட்டினை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றோம். சிறிலங்கா இராணுவமோ பொலீசாரோ சிறிலங்கா அரசின் சட்டங்களோ தமிழ் மக்களின் நலன்களுக்கானது அல்ல என்பது மீண்டும் பட்டவர்தனமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் விடுவிக்கப்படாவிட்டால் அவர்களது விடுதலைக்காக மாணவர்கள் மேற்கொள்ளும் போராட்டங்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பூரண ஆதரவு வழங்கும். – என்றுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்