ஈழத்தமிழர்களுக்கு நீதிகிட்டுவதற்காக தொழிற்கட்சி தொடர்ந்து பாடுபடும் – பிரித்தானிய நாடாளுமன்றில் கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் உறுதி!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவெழுச்சி நாள் நெருங்கும் நிலையில் இன்று பிரித்தானிய நாடாளுமன்றில் இடம்பெற்ற நினைவு ஒன்றுகூடலில் தமிழர்களுக்கு அனைத்துலக நீதி கிட்டுவதை பிரித்தானியாவின் தொழிற்கட்சித் தலைமை வலியுறுத்தியுள்ளது.

இன்று 15.05.2019 மாலை 6:00 மணிக்கு பிரித்தானிய நாடாளுமன்றின் பிரதான கட்டிடத் தொகுதியில் உள்ள பத்தாவது கேட்போர் கூடத்தில், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் ஏற்பாட்டில், நாடாளுமன்ற உறுப்பினர் சிபோன் மக்டொனா அவர்களின் அனுசரணையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவு ஒன்றுகூடலில் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் பங்கேற்று உரையாற்றினார்.

பத்து ஆண்டுகள் எட்டிய நிலையிலும் தமக்கு இழைக்கப்பட்ட இனவழிப்பிற்கு நீதிகிட்டாத நிலையில் தமிழர்கள் இருப்பதையிட்டு தனது கவலையை வெளியிட்ட ஜெரமி கோர்பின், தமிழர்களுக்கு நீதி கிட்டுவதற்காக தொழிற்கட்சி தொடர்ந்து பாடுபடும் என்று குறிப்பிட்டார்.

இன்றைய நினைவு ஒன்றுகூடலில் தொழிற்கட்சியின் உயர்நிலைத் தலைவர்கள் – நிழல் அமைச்சர்கள் உட்பட பல முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தமிழர்களுக்காக குரல்கொடுத்தனர்.

முன்னதாக நேற்று 14.05.2019 செவ்வாய்க்கிழமை பிரித்தானிய மகாராணியாரின் அதிகாரபூர்வ நிழல் நிதி அமைச்சரும், தொழிற்கட்சியின் இரண்டாம் தலைவருமான ஜோன் மக்டொனல் அவர்கள் பிரித்தானியாவில் உள்ள தமிழ் அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களின் பிரதிநிதிகளை சந்தித்து தொழிற்கட்சியிடம் இருந்து தமிழர்கள் எதிர்ப்பார்க்கும் அரசியல் செயற்பாடுகள் பற்றிக் கேட்டறிந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்