சுவிசில் நடைபெற்ற தியாகதீபம் அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்த விளையாட்டுப் போட்டிகள்.

தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து தன் உயிர்தந்த தியாகதீபம்; அன்னைபூபதி அம்மா அவர்களின் 31ம் ஆண்டு நினைவினை முன்னிட்டு நடாத்தப்பட்ட 23வது விளையாட்டுப் போட்டிகளானது 26.05.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று வோ மாநிலத்தில் இவர்டோன் நகரில் சிறப்பாக நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினரால் நடாத்தப்பட்ட போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ், தமிழீழத் தேசியக்கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் ஆரம்பமானது.

எதிர்கால சந்ததியினரிடம் தமிழ்த்தேசிய உணர்வை, ஒற்றுமையை பேணிப் பாதுகாக்கவும், தாயகம் நோக்கிய தேடலை உண்டுபண்ணும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் விளையாட்டுப் போட்டியில்; உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், மெய்வன்மையாளர் போட்டிகள், பார்வையாளர் போட்டிகள் போன்ற அனைத்து விதமான போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றதுடன் பல விளையாட்டுக்கழகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
வெற்றி பெற்ற வீரர்களுக்கும், கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் போட்டிகள் நிறைவடைந்தன.

இவ் விளையாட்டுப்போட்டிகள் சிறப்பாக நடைபெற உதவிய அனைவருக்கும் எமது வாழ்த்துகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

About இலக்கியன்

மறுமொழி இடவும்