விக்கி, கஜன் முறுகல் வலுக்கிறதா?

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை இணைத் தலைவராகக் கொண்ட தமிழ் மக்கள் பேரவையின் நேற்றைய பொதுக்கூட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் கூட்டணி எனும் பெயரில் புதுக் கட்சி ஒன்றினை ஆரம்பித்திருந்தார். அதனையடுத்து புதிய கூட்டணி ஒன்று அமைப்பது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவந்திருந்தன.

சுரேஸ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈபிஆர்எல்எவ் அமைப்பினை புதிய அரசியல் கூட்டில் விக்கினேஸ்வரன் இணைத்துக்கொண்டால் தாம் அந்தக் கூட்டணியில் இடம்பெறப்போவதில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எதிர்ப்புத் தெரிவித்து வந்தது.

ஆனால் விக்கினேஸ்வரனோ புதிய கூட்டணிக் கட்சிகள் தொடர்பில் இன்றுவரை அறிவிக்கவில்லை.

இந்நிலையில் நீண்டகாலமாக கூட்டப்படாமலிருந்து தமிழ் மக்கள் பேரவைக் கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இக் கூட்டத்திலேயே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்றிருக்கவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேற்று காலையே தமக்கு கூட்டத்திற்கான அழைப்பு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டதாகவும் ஏற்கனவே மக்கள் சந்திப்புக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததால் நேற்று மாலைய கூட்டத்தில் தம்மால் பங்கேற்க முடியவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.

எனினும் விக்கினேஸ்வரனது கூட்டணி தொடர்பான முடிவுகளால் ஏற்பட்ட அதிருப்தி நிலை காரணமாகவும் கடந்த இரு வாரங்களுக்கு முன் தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் தனது கட்சியில் இணைந்துவிடுமாறு விக்கினேஸ்வரன் தனித்தனியாக அனுப்பியதாகக் கூறப்படும் கடிதத்தினால் கொதித்துப் போயுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமிழ் மக்கள் பேரவையை தனது கட்சி நலன்சார்ந்து விக்கினேஸ்வரன் பயன்படுத்துவதாக ஏற்பட்டுள்ள மனக்கசப்பு காரணமாகவே கூட்டத்தைப் புறக்கணித்ததாகவும் உள்ளக தகவல்கள் தெரிவித்தன.

About இலக்கியன்

மறுமொழி இடவும்