தற்கொலைதாரியின் உடலை புதைக்க மீண்டும் எதிர்ப்பு – மக்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பாரதி வீதியில் உள்ள மயானத்தில் சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடலைப் புதைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேச மக்கள் எதிர்ப்பு போராட்டம் ஒன்றினை மேற்கொண்டனர்.

குறித்த பகுதியில் இன்று (சனிக்கிழமை) காலை சீயோன் தேவாலய தற்கொலைதாரியின் உடலைப் புதைப்பதற்கு நடவடிக்கையெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அப்பகுதியில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள் மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டனர்.

வீதிகளில் டயர்களை எரித்தும் வீதிகளை மறித்தும் நடைபெற்ற இந்த போராட்டத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.

கடந்த 21ஆம் திகதி சீயோன் தேவாலயத்தில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்தவரது உடலை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு கடந்த வெள்ளிக்கிழமை 7ஆம் திகதி மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் அரசாங்க அதிபருக்கு கட்டளை பிறப்பித்திருந்தார்.

இதனையடுத்து பொலிஸார் சடலத்தை மட்டக்களப்பு விமான நிலையப் பகுதியில் உள்ள புதூர், ஆலையடிச்சோலை மயானப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அடக்கம் செய்ய முற்பட்டனர். இதனையடுத்து அங்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதன்பின்னர் பொலிஸார் சடலத்தை புதன்கிழமை (12) காத்தான்குடி முஸ்லிம் மயானத்தில் அடக்கம் செய்ய முற்பட்டபோது அங்கும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வீதியை மூடினர்.

இந்நிலையில் பொலிஸார் நேற்று முன்தினம் மட்டக்களப்பு பொலனறுவை எல்லைப் பகுதியான ரிதிதென்னை இராணுவ முகாமிற்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் சடலத்தை புதைக்க முற்பட்டனர். அங்கும் மக்களின் எதிர்ப்பு காரணமாக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டது.

இதேவேளை காத்தான்குடி பகுதியில் குறித்த சடலத்தை புதைப்பதற்கு அனுமதிப்பத்தில்லையென காத்தான்குடி நகரசபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்