பசில் ராஜபக்ஷவுக்கும் எனக்கும் தொடர்பில்லை: கூட்டமைப்பு நேர்மையாக நடக்கவில்லை

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் பசில் ராஜபக்சவுடன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டார் என சில தரப்புக்கள் கூறிவரும் நிலையில், விக்கினேஸ்வரன் அதை அடியோடு மறுத்துள்ளார்.

பசில் ராஜபக்சவிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கொழும்பு ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய விசேட செவ்வியில் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

சி.வி.விக்னேஸ்வரன், பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்திற்குச் சென்று பசில் ராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இது குறித்து கொழும்பு ஊடகவியலாளர் ஒருவர் விக்கினேஸ்வரனிடம் கேள்வி எழுப்பியிருந்தார். இந்தக் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே விக்கினேஸ்வரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே பசில் ராஜபக்சவை கண்டிருக்கின்றேன். அவருக்கும் எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அவரை போய் சந்திக்க வேண்டிய அவசியம் எதுவும் எனக்கு கிடையாது.

கூட்டமைப்பிற்கு எதிராக எதிர்க்கட்சியுடன் தான் சேர்வதாக காட்டிக்கொள்ளும் வகையில் சதி நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன. நான் அவரை போய் சந்தித்தாக தெரிவிக்கப்படும் கருத்து முற்றிலும் பொய்யானது.

நான் எனது கட்சியை மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் இருந்து நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றேன். எனது கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான அணி என்று கூறமுடியாது.

நாங்கள் தமிழ் மக்களின் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டும். கூட்டமைப்பு எந்த காரணங்களுக்காக மக்களால் தெரிவு செய்யப்பட்டதோ அதன் அடிப்படையில் அவர்கள் நடந்து கொள்ளவில்லை.

இதன் காரணமாக அடிப்படை கொள்கை ரீதியாக ஒத்துசெல்லும் ஒரு அணிக்கு நான் தலைமை தாங்குகின்றேன் என்றே கூறமுடியும் என அவர் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்