மண்ணுக்காக போராடியவர் உதவியற்ற நிலையில்

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தத்தின்போது நேரடியாக பாதிக்கப்பட்டு இரு கண்களையும் ஒரு காலையும் இழந்த முன்னாள் போராளியே இராமையா புஷ்பரெட்ணம். இவர் தனது மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் கணேசபுரம் வெள்ளாங்குளம் பகுதியில் மீள் குடியேறி வசித்து வருகின்றார்.

தொடர்சியாக மீள் குடியேறி பல்வேறுப்பட்ட சிரமங்கள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் போராட்ட நினைவுகளை சுமந்து வாழ்கையை நகர்த்தும் இவர், சில நேரங்களில் ஒரு வேளை உணவுடனே உறங்க வேண்டிய நிலை ஏற்படுமென தெரிவிக்கின்றார்.

இவ்வாறான சூழ்நிலையில் இராமையா புஷ்பரெட்ணத்தின் வாழ்வாதரத்திற்கு பிரதேச செயலகம் ஊடாக சில கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன. எனினும் கோழிக்குஞ்சுகளை பராமரித்து வாழ்வாதரத்தை கொண்டு செல்லலாம் என்று நம்பிய புஷ்பரெட்ணத்திற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

நோய் காரணமாகவும் கனமழை காரணமாகவும் அனைத்து கோழி குஞ்சுகளும் இறக்க என்ன செய்வது என்று தெரியாமல் வெறும் கோழி கூடுகளோடு வாழ்ந்து வருகின்றனர் குடும்பத்தினர்.

மதிய உணவுக்காக திரிபோசாவுடன் வாசலில் நின்றவாறு வீதியை பார்த்துகொண்டிருக்கும் முன்னாள் போராளியின் மகன், குடும்ப வறுமை காரணமாக அம்மம்மா வீட்டில் தங்கியிருக்கும் மகள், பார்வையற்ற கணவனுடன் காலத்தை கழிக்கும் மனைவி என இவரது குடும்பமே வறுமையில் தவிக்கின்றது.

அவருடைய மனைவி ஒருவேளை உணவுக்கேனும் உழைக்க வேண்டும் என தற்போது தோட்ட செய்கையில் ஈடுபட்டு வருகின்றார். மருத்துவச் செலவும் அதிகரித்து வருவதால் என்ன செய்வது என்று அறியாமல் திண்டாடும் புஷ்பரெட்ணம், பார்வையற்றவர்கள் செய்யக்கூடிய ஏதாவது தொழில் வாய்ப்பை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்