இந்திய விமானங்களின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும் என, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ மாநிலங்களவையில் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், இன்றைய காலகட்டத்தில், விமானங்களில் பறப்பது சொகுசுப் பயணம் அல்ல. இப்போது நேர சேமிப்பைக் கருதி நடுத்தர மக்கள், மாத ஊதியம் பெறுவோர், விவசாயிகள் எனப் பலர் விமானப் பயணங்களை மேற்கொள்கின்றனர்.
கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் வேலைகளுக்காக வளைகுடா நாடுகளுக்கு விமானங்களில் செல்கின்றனர்.
ஆனால், விமானப் பயணிகள் அறிந்துகொள்ள வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விளக்கங்கள், இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளில் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன. பயணிகளால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
ஆகையால் இந்திய விமானங்களின் அறிவிப்புகளை அந்தந்த மாநில மொழிகளிலேயே சொல்ல வேண்டும். குறைந்தது மாநிலத்துக்கு உள்ளேயே பறக்கின்ற வானூர்திகளில் அந்தந்த மாநில மொழிகளிலேயே அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
வைகோவின் குறித்த கோரிக்கையை ஏற்ற சபாநாயகர் வெங்கய்யா நாயுடு இதற்கு அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.