“பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும் கேட்டன” – ஐநாவில் சசிரேகா தமிழ்ச்செல்வன்

வவுனியா ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலும் கேட்டதாக, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவியான சசிரேகா ஐநாவில் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உள்ளக அரங்கில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பான அமர்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர் “இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, என்னையும் எனது இரு பிள்ளைகளையும் விசாரணைக்கென சிவில் உடையில் வந்தவர்கள் இரவு 1 மணியளவில் அழைத்துச் சென்றனர். ஜோசப் முகாமை நெருங்கும் போது எனது கண்களை கட்டினர்.. எனது கண்கள் கட்டப்பட்டிருந்தாலும், பெண்களின் அழுகுரல்களும், ஆண்கள் சித்திரவதைகளால் கதறியதையும் கேட்கும் போது அது ஒரு நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட சித்திரவதை முகாம் என்பதை என்னால் ஊகிக்க முடிந்தது” என அவர் கூறினார்.
“இலங்கையில் அதிகமான சித்திரவதைகள் நடைபெற்ற முகாமாக கருதப்படும் ஜோசப் முகாமில் என்னை தனி அறையில் தடுத்து வைத்து விசாரணை நடத்தும் போது, புலிகளின் தலைவர் பிரபாகரனை பற்றி விசாரித்தனர் எனக்கு தெரிந்த விடயங்களை குறிப்பிட்டேன்” என சசிரேகா கூறியுள்ளார்.

விசாரணை முடிந்த பின்னர் வவுனியாவில் பேருந்து ஒன்றில் ஏற்றி ராமநாதபுரம் முகாமிற்கு அனுப்பி வைத்ததாக தெரிவித்த சசிரேகா, ராணுவத்தினரால் அங்கு தனக்கு பாரிய உயிர் அச்சுறுத்தல் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி மாவட்ட கட்டளை தளபதியாக கடமையாற்றிய, ஜெனரல் ஜகத் ஜயசூரியவால், கடந்த 2007ஆம் ஆண்டு காலப்பகுதியில், ஜோசப் வதை முகாம் நடத்தப்பட்டு வந்தது. ஏற்கனவே இவர் மீது பாரிய யுத்தக் குற்றச்சாட்டுக்களை பல சர்வதேச அமைப்புக்கள் முன்வைத்துள்ளன.

ஜோசப் வதை முகாமில், தமிழ் இளைஞர் யுவதிகள் மிகவும் மோசமாக சித்திரவதை செய்யப்பட்டதாக சர்வதேச உண்மை மற்றும் நீதித் திட்டத்தின் நிறைவேற்று பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்திருந்தார். இருந்தபோதும், இந்தக் குற்றச்சாட்டுக்களை, இலங்கையின் முன்னைய அரசாங்கமும், தற்போதைய அரசாங்கமும் முற்றாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்