ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு எனும் சட்டகத்துக்குள் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக புதிய அரசியலமைப்பு அமையவேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
அந்த அரசமைப்பு தமிழ் மக்களின் நீண்டகால அபிலாஷையான சுயமரியாதை மற்றும் அடையாளம் என்பவற்றை உறுதிப்படுத்துவதாகவும் இலங்கையர் என்ற அடையாளம், இலங்கை தேசம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய குணாம்சங்களைக் கொண்டதாகவும் அமையவேண்டும் எனவும் அவர் கூறினார்.
அரசியலமைப்பு தயாரிப்பு தொடர்பான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை அக்குழுவின் தலைவர் என்ற வகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நேற்று (23) அரசியலமைப்பு (நிர்ணய) சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அந்த அறிக்கையை வரவேற்று உரையாற்றும்போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
முற்றுமுழுதாக சிங்களவர்களின் நலன் சார்ந்த அரசியலமைப்பை வரவேற்று அவர் தொடர்ந்து உரையாற்றும் போது,
நாம் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் சார்பில் நாட்டின் உயரிய சட்டமான அரசியலமைப்பை தயாரிக்கும் பணியில் ஈட்பட்டுள்ளோம். ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு எனும் சட்டகத்தினுள் இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும். அது மாத்திரமன்றி, தன்னார்வத்துடன் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இது அமையவேண்டும்.
சகலராலும் நியாயமாக ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், நிலையான தேசிய ஒற்றுமையை ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைவதிலேயே இந்த அரசியலமைப்பு தயாரிக்கும் பணிகளின் வெற்றி தங்கியுள்ளது. ஐக்கியமான, பிரிக்கப்படாத மற்றும் பிரிக்க முடியாத நாடு என்ற அடிப்படையில் நாட்டு மக்கள் சுதந்திரமாக இணக்கத்துடன் வாழ்வதற்கான வழியை ஏற்படுத்த வேண்டும்.
இரு பிரதான கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டுடன் எந்தவொரு அரசியலமைப்பும் தயாரிக்கப்பட முடியாது. குறிப்பாக, தமிழ் மக்களின் கருத்துக்களும் அவற்றில் உள்ளடக்கப்பட வேண்டும். இரு கட்சிகளின் கருத்தொருமைப்பாட்டுடன் ஏனைய கட்சிகளின் கருத்துக்களும் உள்வாங்கப்படுவது அவசியமாகும்.
அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது இதற்கான வழிவகைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்றுக்கொள்ளக்கூடிய அபிப்பிராயங்கள் அரசியலமைப்புக்கான அடிப்படையை வழங்க வேண்டும்.
அரசியல் சூழல் நிறைந்த எல்லைக்கு அப்பாலிருந்து அரசியலமைப்பு கொண்டுவரப்பட வேண்டும். இலங்கையர் என்ற அடையாளம், இலங்கை தேசம் என்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய குணாம்சங்களைக் கொண்டதாக அரசியலமைப்பு அமையவேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 70 வருடங்களில் இதனை அடைய முடியாமல் போயுள்ளது.
1987, 1988 காலப் பகுதியில் இருந்து அரசியலமைப்பை தயாரிக்கும் பல்வேறு முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளில் பல விடயங்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அரசியலமைப்பில் இணைக்கப்படவில்லை.
எனினும், அரசியலமைப்பை தயாரிக்கும் தற்போதைய செயற்பாடானது முற்று முழுதாக மாறுபட்ட சூழலில் முன்னெடுக்கப்படுகிறது. நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையிலும் அர்ப்பணிப்புடன் செயற்படுவதிலேயே இதன் வெற்றி தங்கியுள்ளது.
தமது அடையாளம் மற்றும் மரியாதையை உறுதிப்படுத்தும் வகையில், நியாயமான மற்றும் ஏற்றுக் கொள்ளக் கூடிய அரசியலமைப்பு ஏற்பாடொன்றே தமிழ் பேசும் மக்களின் நீண்டகால இலக்காக உள்ளது. உலகில் இதற்காக பல ஏற்பாடுகள் இருக்கின்றன. தீர்மானம் இல்லாத விளைவுகளால் தமிழ் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டன.
சிறந்த கல்வியறிவைப் பெற்றுள்ள தமிழ், சிங்களவர்கள் பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். சர்வதேச ரீதியில் நாடு தொடர்பில் காணப்பட்ட நன்மதிப்பு சிதைந்துள்ளது. பொருளாதார ரீதியில் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளோம்.
இது போன்ற காரணங்களால் பின்னடைவைச் சந்தித்துள்ள நாட்டுக்கு புதிய எதிர்காலத்தை ஏற்படுத்த, புதிய உயரிய சட்டமொன்றைத் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.