புலிகள் காலத்தை போன்று இனியும் செயற்படுவோம்! – சசிதரன்

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் தியாகி திலீபனின் அஞ்சலி நிகழ்வுகள் எவ்வாறு இடம்பெற்றதோ, அதே போன்று இனிவரும் காலங்களிலும் நடைபெறுமென புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத்தினதும், தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளருமான வடிவேல் சசிதரன் தெரிவித்தார்.

புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்டவர்களது ஒன்றியத்தின் ஏற்பாட்டில், நேற்று (செவ்வாய்க்கிழமை) காரைதீவில் திலீபனின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அதன் பின்னர் உரையாற்றிய போதே சசிதரன் மேற்குறித்தவாறு கூறியுள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள தமிழர்களும் அஹிம்சை ரீதியில் போராடுவார்கள் என்பதனை உலகிற்கு எடுத்துக்காட்டுவதாக தியாகி திலீபனின் போராட்டம் அமைந்திருந்ததென சசிதரன் தமது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் திலீபனின் நினைவுதினத்தை நினைவுகூர பல கெடுபிடிகள் காணப்பட்ட போதும், நல்லாட்சியில் அவை தளர்த்தப்பட்டன. குறிப்பாக கடந்த வருடங்களை விட தமிழர் தாயகத்தில் இம்முறை மிகவும் உணர்வுபூர்வமாக திலீபனின் நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்