ரோஹிங்யா அகதிகளை இலங்கையில் அமைப்புகள் பராமரித்து வருவது இலங்கையில் மென்மேலும் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டை தோற்றுவிக்கும் என முன்னாள் பிரதி அமைச்சரும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஏற்கனவே எமது நாட்டிற்குள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் இனமுறுகல்கள் இவ் அகதிகளின் வருகையினால் மென்மேலும் அதிகரிக்கவே வாய்ப்பிருக்கின்றது.
மனிதாபிமான முறையில் இவர்களை பாதுகாப்பது என்பது சிறந்த விடயமாகும். இருப்பினும் எமது நாட்டில் நிலப்பரப்புகளை ஒப்பிடும் பொழுது சனத்தொகை செறிவு அதிகமாக உள்ளது.
இன்று நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்களாகிய முஸ்லிம் மக்களுக்கு அவர்களுக்கான உரிமையினை முஸ்லிம் தலைவர்களால் பெற்றுக் கொடுக்க முடியாதுள்ளது.
ஆகவே இவ் அகதிகளுக்கான மனிதாபிமாக குரல் எழுப்புவர்கள் அரசியல் இலாபங்களை மறந்து நாட்டின் இறைமையைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
வெறுமனே ஊடக அறிக்கையின் ஊடாக தம்மை மனித உரிமை காவலர்கள் என்று காட்டிக் கொள்வதை தவிர்த்து நியாயமாக சிந்திக்க வேண்டும்” என பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.